16
திருக்குறள்
தமிழ் மரபுரை
“அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும். புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை” (2)
என்பது நீதிநெறி விளக்கம்.
முதற்காலத்தில் ஆவுங் காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலை நாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.
L. pecu - cattle, pecuia - money. E. pecuniary - (consisting) of money.
அதி. 41 - கல்லாமை
அதாவது, கல்லாதிருத்தல், இது கல்வியின்மையின் தீமையை எடுத்துக்
கூறுவதால் கல்வியின்பின் வைக்கப்பட்டது. கல்விச்சிறப்பு உடன்பாட்டு
முகத்தாற் கூறிய அளவில் முற்றுப் பெறாமையால், இங்கு எதிர்மறை
முகத்தாலும் கூறவேண்டியதாயிற்று.
401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
(இ-ரை.) நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல் – அறிவு நிரம்புவதற் கேதுவான நூல்களைக் கல்லாது ஒருவன் (அவையின்கண்) சொற் பொழிவாற்றத் தலைப்படுதல்; அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்று - அறைகள் வகுக்காமலே வட்டாட்டம் ஆடுவதை யொக்கும்.
அரங்கு சதரஞ் சதரமாக வகுத்த கட்டம். வட்டு வட்டமான ஆட்டுக்
கருவி. அரங்கு வகுத்து வட்டாடல் என்பது, சிறுவர் விளையாடும் பாண்டி
(சில்லாக்கு) என்னும் விளையாட்டிற்கும் பெரியோர் ஆடும் சூதாட்டத்திற்கும்
பொதுவாம். முன்னதில் வட்டை அரங்கிற்கு உள்ளெறிவதும், பின்னதில்
வெளியே உருட்டுவதும் வேறுபாடாம்.
“கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்” (நற்.3)