பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

திருக்குறள்

தமிழ் மரபுரை



நல்லார்க்குத் தீமை துன்பமும், கல்லார்க்குத் தீமை இருமைத் துன்பத்திற்கும் ஏதுவான ஒழுக்கக்கேடும், அவராற் பிறர்க்குத் தீமை சிலர்க்கு ஒழுக்கக் கேடும் சிலர்க்குத் துன்பமுமாக இரண்டும் என அறிக. கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாம். என்னுங் கொள்கைபற்றிக் கற்றார் நல்லா ரெனப்பட்டார்.

"Riches serve a wise man, but command a fool” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

409. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.

(இ-ரை.) கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதவர் கல்வி நிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார நிலைமையும்பற்றிய மேல்வகுப்புகளிற் பிறந்தாராயினும்; கீழ்ப் பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - அந் நால் நிலைமையும்பற்றிய கீழ்வகுப்புகளிற் பிறந்திருந்துங் கற்றவரைப்போல அத்துணைப் பெருமையுடையவரல்லர்.

எல்லா நாடுகளிலும், அறிவுத் தொழிலார், ஆட்சித் தொழிலார். படைத்தொழிலார், வணிகத்தொழிலார், உழவுத் தொழிலார், பெருஞ்செல்வர் ஆகியோர் மேலோராகவும்: ஏவலர் (peons), வண்ணார், மஞ்சிகர் (barbers), பறம்பர் (shoe makers), வீட்டுவேலைக்காரர், கூலிவேலைக்காரர் முதலியோர் கீழோராகவும்; கருதப்படுவது இயல்பே. திருவள்ளுவர் பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும்” என்றும். “ஒழுக்க முடைமை குடிமை” என்றும், கூறியிருத்தலால், மேற்பிறந்தார் கீழ்ப்பிறந்தார் என்னும் மன்பதைப் பாகுபாடு மேற்கூறிய நால்வேறு நிலைமை பற்றியதேயன்றி, பரிமேலழகர் உரைத்தது போல் ஆரிய முறைப்பட்ட பிறவிக்குலப் பிரிவினையைத் தழுவியதாகாது. எடிசன் செய்தித்தாள் விற்போராகவும், தாலின் (Stalin) பறம்பராகவும் இருந்து, அறிவாலும் ஆட்சியாலும் மேன்மை பெற்றமை காண்க, ஆரிய முறைப்படி பறம்பன் ஆள்வோனாக முடியாது.

"வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (புறம்.183)

“சிறப்பின் பாலார் மக்கள், அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு" (மணிமே.23:31-2)