பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

69



496. கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து.

(இ-ரை.) வல்கால் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் வலிய சக்கரங்களுள்ள நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - கடலின்கண் ஓடும் மரக்கலங்களும் நிலத்தின்கண் ஓடமாட்டா.

'கால்வல் நெடுந்தேர்' என்பது, வலிய சக்கரங்களும் நெடிய உயரமு முடையவாயினும் என்பதுபட நின்றது. ஏழ்தட்டுகள் உடையது முழுத்தேர் என்றும், ஐந்தட்டுகள் உடையது முக்கால் தேர் என்றும், முத்தட்டுகள் உடையது அரைத்தேர் என்றும் கூறுவர். நெடுந்தேர் என்றது முழுத்தேரை. தேர்க்குக் கால்போன் றிருத்தலாற் சக்கரம் காலெனப்பட்டது.

முதலை நிலத்தில் மெள்ள மெள்ளவேனும் இயங்கும். மக்களும் விலங்கு பறவைகளும் நிலைக்கும் நீரில் மெள்ளமெள்ளவேனும் இயங்க முடியும். ஆயின், தேர் கடலிலும் கப்பல் நிலத்திலும் இயங்கவே இயங்கா. ஆதலால், இக் குறளிலுள்ள பிறிதுமொழிதல் மேலையதினும் வேறுபட்டதாம்.

வேற்றரசர் புகமுடியாத காவல் மிகுதியும் அரண் சிறப்பும் பொருள் வளமும் நிலப்பரப்பு முள்ள வல்லரசர் நாடுகளும் உள. அவற்றை உட்பகைத் துணைகொண்டல்லது தம் சொந்தப் படையாலும் திறமையாலும் அயலார் கைப்பற்ற முடியாது என்பதே இக் குறளின் உட்கருத்தாம். ஆகவே, தேர்ந்த ஒற்றர் வாயிலாக அருமறைகளை யெல்லாம் அறிந்து, உடனிருந்து காட்டிக் கொடுக்கும் உட்பகைவரைத் துணைக்கொண்டே மேற்செல்க என்பதாம். 'தேர்', 'நாவாய்' என்பன பால்பகா அஃறிணைப் பெயர்கள். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

497. அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின்.

(இ-ரை.) எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின்; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற் போதும், வேறு துணை வேண்டுவதில்லை.