உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

பழந்தமிழாட்சி யன்றி, அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்திலது. மேலும் அமைச்சர் படைத்தலைவரொடு சூழ்ந்தே எதுவுஞ் செய்யவேண்டும் என்னும் யாப்புறவும் அரசனுக்கிருந்ததில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்வித்ததும், புதையலுரிமை எடுத்தவர்க்கே என்று பறை சாற்றுவித்ததும் இதற்குச் சான்றுகளாம்.

அரசன் செயல்: அரசன் தன் துணையதிகாரிகளும் புலவருங் கூடிய அவையுடன் அரியணையில் வீற்றிருத்தல், அரசு வீற்றிருக்கை என்றும் மகிழிருக்கை என்றும் ஓலக்க மிருக்கை என்றும் கொலு விருக்கை என்றும் கூறப்படும். அது பெரும்பாலும் காலையில் தொடங்குமாதலால், அதை நாளவை நாண்மகிழிருக்கை நாளோ லக்கம் எனக் கூறுவதுண்டு. அரசன் அரசு வீற்றிருக்கும் மண்டபம், வேத்தியன் மண்டபம், ஓலக்கமண்டபம், கொலுமண்டபம், அத்தாணி மண்டபம், சபாமண்டபம் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். அம் மண்டபத்திற்குச் சிறப்புப் பெயரிடுவதுமுண்டு. சடாவர்மன் குலசேகர பாண்டியனின் ஓலக்கமண்டபம் ‘புகழாபரணம்' எனப் பெயர் பெற்றிருந்தது.

அரசன் ஒவ்வொரு காரியத்தையும் அதற்குரிய சிறப்புக் குழுவுடன் அல்லது அதிகாரியுடன் கலந்து எண்ணுவானாயினும், அனைத்துக் காரியங்களையும் தலைமையமைச்சனோடு கூடிச் சூழ்ந்தபின்னரே ஒரு முடிவிற்கு வருவன்.

அரசிருக்கையிலும் சூழ்வினையிலும் அரசியும் உடனிருப்பது

வழக்கம்.

அரசன் எக்காரியத்தைச் செய்தாலும், கணியன் குறித்த நன்னாளிலும் மங்கல வேளையிலுமே செய்வன்.

ஊர்ச்சபையார், நாட்டதிகாரிகள், கோயிற் கண்காணிப்பாளர், பொதுமக்கள் முதலியவருள், தனிப்பட்டவரோ ஒரு குழுவாரோ ஒரு காரியத்திற்கு அரசனுடைய ஒப்பத்தையேனும் தீர்ப்பையேனும் பெறவேண்டி அவனிடம் வரின், அவர் தாமே நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது அரசனுக்கு அதைத் தெரிவிப்பர். அரசனுக்கு மிக வேண்டியவரா யிருந்தாலொழிய நேரில் தெரிவிக்க முடியாது. அரசன் அக் காரியத்தை அதற்குரியவருட னெல்லாம் சூழ்ந்து, தன் கட்டளையை நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது பிறப்பிப்பன்.

அரசனுடைய ஆணைகளை ஓலையிலெழுதும்போதும் பின்னர் அவற்றுள் முக்கியமானவற்றைக் கல்லில் வெட்டும் போதும், அவை பிறந்த இடத்தையும் அமயத்தையும் பின்வருமாறு குறிப்பது வழக்கம்: