உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பதிப்புரை

மொழிப் பேரறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் (1902-1981) பெரும் பகுதியில் வாழ்ந்தவர். இந் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுக்குள்ளே பன்மொழிப் புலமையுடன், தமிழ்மொழி, இனம், பண்பாடு இவற்றின்மீது தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையில் பற்று மிகக் கொண்டவர் என்றால் மிகையாகாது. இவற்றின் தலைமைக்காகவே, தன்னேரில்லாத் தன்மைக்காகவே தமது வாழ்வினைத் தியாகமாக்கியவர். அண்மையில் சங்கத் தமிழ் மதுரை மாநகரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிலே பங்குகொள்ளச் சென்று, தம் உயிர்போலப் பாராட்டி வந்த தமிழ்மொழியின் பெருமை குறித்துச் சொற்பெருக்காற்றியதோடு - அவருடைய உயிரும் உலகத் தமிழ் மாநாட்டுச் சூழலுடன் கடவுளின் திருவடிகளை அடைந்தது. அவர் உயிர்நீத்தும் இன்றும் பேசுகின்றார். அவர் தமிழ்மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டிற்கும் செய்த அருந்தொண்டினை அவருடைய ஆராய்ச்சி நூல்கள் பலவும் பேசுகின்றன. தமிழ்மொழியும், உலகமும் உள்ளளவும் அந் நூல்கள் பேசிக்கொண்டே இருக்கும்.

தூய்மையும், நேர்மையும், துணிவும், நற்பண்பும் நிறைந்த அவருடைய வாழ்க்கையை உருவாக்கியவர் இயேசு பெருமான் என்னும் உண்மையை இங்கு அறிவித்தல் வேண்டும். இயேசு கிறித்துவின் வாழ்க்கை - சிறப்பாக அவருடைய சிலுவைப்பாடுகள் அவரைப் பெரிதும் இளமை முதற்கொண்டே ஆட்கொண்டன. இதற்குச் சான்றாக விளங்குவது அவருடைய கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந் நூலாகும்.

1969-ல் எண்ணூரிலே, பாவாணரின் மகளார் திருவாட்டி மங்கையர்க் கரசி இராபின்சன் வீட்டில் முதன்முதலாக நேரில் அவரைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது நான் எண்ணூரில் குடியிருந்தேன். நான் தமிழ் முதுகலை (M.A.) முடித்திருந்த சமையம் அது. நான் இயேசு பெருமானின் ஓர் எளிய அடியான் நற்செய்தி ஊழியன், தமிழ்மொழியில் சிறிது பயிற்சியும் பற்றுமுள்ளவன் என்பதை அறிந்ததும், கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந் நூலை என்னிடம் கொடுத்தார். சில பாடல்களையும் பாடிக் காட்டினார். கிறித்து பெருமானிடத்தில் அவருக்கு இருந்த பற்றுமையையும், அவருக்குத் திருப்பணி ஆற்றுவதற்கு அவருக்கு இருந்த இளமைக் கால விருப்பத்தையும்