உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

இலக்கணக் கட்டுரைகள்

ஆதியில் ஏனைய மொழிகட்கெல்லா மில்லாது உயிர்மெய் வரிகள்

தமிழுக் கிருந்ததினாலேயே, அதன் அரிவரி நீண்டு நெடுங்கணக் கெனப்பட்டது. ஏற்கெனவே நெடுங்கணக்கா யிருக்கும் அரிவரியை (செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் கூறியபடி) இன்னும் நெடுங்கணக்காக்க நினைப்பது என்னே பேதைமை!

இனி, ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று. பொருள்களின் சிறப்புப் பெயர் (Proper Name) களே எழுத்துப் பெயர்ப்பிற்கும்(Transliteration) தற்பவத்திற்கும் இடமாகும். இதற்குப் பிறமொழி யெழுத்துகள் வேண்டுவவல்ல. தமிழில் இயன்றதுணை எழுதல் தகும். ஏதேனுங் குறையிருப்பின் அது எல்லா மொழிகட்கும் பொதுவாகும். இதற்கென்றே தமிழிற் புத்தெழுத்துகளைச் சேர்ப்பின் தமிழின் தூய்மையும் இயல்பும் எளிமையும் இனிமையும் கெடும். அங்ஙனம் தமிழைக் கெடுத்து வழங்குவதினும், அதை விட்டுவிட்டு அயன் மொழியை வழங்குவதே சாலச் சிறந்ததாம். அதனாற் புத்தெழுத்துகளைத் தமிழிற் புகுத்தவேண்டும் என்னும் பொருந்தாக் கூற்றைப் புறத்தே விடுக்க.

- “செந்தமிழ்ச் செல்வி" நளி 1934