உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15

தமிழ் நெடுங்கணக்கு

(கவனிப்பு: நான் கடந்த அரை நூற்றாண்டாகச் செய்து வந்த சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சியின் பயனாகக் கண்ட உண்மைகளையும் கொண்ட முடிபுகளையும், நூலாக உருவாக்குமுன் பல கட்டுரைத் தொடர்களாக வெளியிடக் கருதிச் 'செந்தமிழ்ச் செல்வி'க்கு விடுத்து வந்தேன். அவற்றுள் இறுதியாக வெளிவந்த தொடர், “தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள்" என்பது. அது ஐம்பது கட்டுரை கொண்டது. அவற்றுள் பதினான்கு மட்டும் வெளிவந்துள்ளன.

இன்று திடுமென எதிர்பாராத ஒரு நிலைமை நேர்ந்து, 'ஐ ஔ' ‘அய் அவ்' தானா? என்றும், தமிழுக்கு எழுத்து மாற்றம் இன்றியமையாததா வென்றும், பலர் நேரிலும் எழுத்து வாயிலாகவும் மேன்மேலும் வினவி வருவதால், அவரனைவர்க்கும் விடையிறுக்கு முகமாக, (1) தமிழ் நெடுங்கணக்கு, (2) 'ஐ ஔ' 'அய் அவ்' தானா? (3) எகர ஒகர இயற்கை, (4) உயிர்மெய்க் குறிகளின் ஓரியலின்மை, (5) அறியாமை யகற்றல். (6) பகுத்தறிவின் பயன் என்னும் அறு தலைப்புக் கட்டுரைகளை இன்று ஒவ்வொன்றாகச் செல்வியில் வெளியிடத் துணிந்தேன்.

தமிழ்நா டெங்கணுமுள்ள புலவர் கல்லூரி ஆசிரியரும் மாணவரும் ஊன்றிக் கவனிக்க.

தமிழ்ப் பற்றாளர் ஆயிரக் கணக்காக அச்சிட்டுப் படிக்கத் தெரிந்த தமிழர் அனைவர்க்கும் ஆங்காங்கு வழங்குக.

'செந்தமிழ்ச் செல்வி' வாங்காத கல்வி நிலையங்களிலும் நூலகங்களி லும், ஆண்டுக் கையொப்பங் கட்டி ஒரு படியேனும் ஒழுங்காக வருவிக்கு மாறு, பொறுப்புள்ள தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பற்றாளரும் முயற்சி மேற்கொள்க.)

தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழி. இவ் வுண்மையை முன்னமே ஒரு பழம்பெரும் புலவர் கண்டு,

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”