உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

இலக்கணக் கட்டுரைகள்

3. ஆ, ஈ, ஊ (அ,இ,உ) ஆகிய மூன்றும் தமிழில் முதன்முதல் தோன்றிய சுட்டெழுத்துகள்.

ஆரியச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் மூலம் தமிழ்ச் சுட்டெழுத்துகளே. கால்டுவெல் திரவிட ஒப்பியலிலக்கணம் (சென்னைப் பதிப்பு) 421 மற்றும் 422ஆம் பக்கம் பார்க்க.

4. 'ரு', 'லு' என்பவை உயிரெழுத்துகளல்ல; குற்றியலுகரத்தொடு கூடிய ரகர லகர மெய்கள்.

5. கிரேக்கத்தில் க்ஸ் (ks, x) என்றுள்ள இணைமெய் வடமொழியில் க்ஷ் (ஷ், ksh) என்று வளர்ச்சியடைந்துள்ளது.

6. தமிழ் ஆய்தமே வடமொழி விஸர்க்கம்.

7. வண்ணமாலை வரிசையமைப்பிலும் உயிர்மெய் யமைப்பிலும், வடமொழி முற்றும் தமிழைப் பின்பற்றியதே.

8. அம், அ: என்று இறுதியிற் சேர்த்திருக்கும் இரண்டும் தனிக்குறிலை யடுத்த மெய்யான அசைகளே யன்றித் தனி யெழுத்துகளாகா; ஒருபோதும் தனி உயிர்களாகா.

தி. நா. சுப்பிரமணியன் தவறு

திரு. தி. நா. சுப்பிரமணியனார் தமிழின் தொன்மை முன்மைகளை அறியாது, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று வந்து தமிழகத்தில் தங்கிய சமண புத்தக் குகைவாணர், வேலையின்றி வெட்டி வைத்த பிராமிக் கல்வெட்டெழுத்துகளையும் பிற்காலக் கல்வெட்டுகளையும் துணைக் கொண்டு, நரி தன் வாலால் கடலாழத்தைக் கண்டதுபோல, பண்டைத் தமிழ் எழுத்துகளைப் பற்றி வரைந்து 1938ஆம் ஆண்டில் வெளியிட்டிருப்பது உண்மைக்கு முற்றும் மாறாகும்.

ஆரியர்க்கு முற்றும் அடிமையாய்ப் போன முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலிருந்து, தமிழ் எழுத்திலும் இலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கை வழிபாட்டு முறைகளிலும், பல தவறுகளும் தாறுமாறுகளும் நேர்ந்துள்ளன. தமிழ்க்காப்புத் தமிழர் கையினின்றும் நழுவிவிட்டது. வடசொற்களும் சொற்றொடர்களும் வடவெழுத்துகளும் கல்வெட்டிற் கலந்ததொடு, வடமொழிக் கல்வெட்டுகளும் படிப்படியாய்த் தோன்றியுள்ளன. இரண்டோ ரிடத்தில் வடமொழிக் கல்வெட்டே தோன்றியுள்ளது.

கிறித்துவிற்கு முற்பட்ட அல்லது கிறித்தவ வூழித் தொடக்கத்தில் எழுதப்பட்ட ஏட்டுச்சுவடி ஒன்றும் இன்று இன்மையால், கல்வெட் டெழுத்தைக் கொண்டு பண்டைத் தமிழெழுத்தைக் கணித்தறிய முடியாது.

யாப்பருங்கல விருத்தியில் கூறப்பட்ட உருவெழுத்து, உணர்வெழுத்து, ஒலியெழுத்து, தன்மை யெழுத்து என்னும் நான்கையும், திரு. தி. நா. சுப்பிர மணியனார் பிறழ வுணர்ந்திருக்கின்றார்.