உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

79

மேலும், ஏது, தாது என்பவை வடசொற்கள் என்னும் பண்டைக் கொள்கை இனிச் செல்லாது. வடமொழி தேவமொழியென்றும், அது கடன்கொள்ளாதென்றும், அதிலுள்ள சொற்கள் யாவும் ஆரியச் சொற்களே யென்றும், குருட்டுத்தனமாக நம் முன்னோர் நம்பிய கருநாடகக் கொள்கை இன்று மொழிநூலாராய்ச்சியால் தகர்ந்து, வடசொற்களுள் ஐந்தி லிருபகுதி தென்சொல் என்னும் கொள்கை வலுத்துவருகின்றது.

ஏது, தாது என்னும் இரு சொற்களும் தென்சொல்லா என்பதை, சொற்பிறப்பியல், சொற்புணர்ச்சி என்னும் இரு கட்டளைக் கற்களில் உரைத்துக் காண்பாம்.

ஏது என்னும் சொற்கு வேர்ப்பொருள் ஏவுதல் அல்லது தூண்டுதல் (“Impulse”) என்று, மானியர் உல்லியம்சு (Monier Williams) என்னும் மேலைச் சமற்கிருதப் பேரறிஞர் தம் வடமொழி-ஆங்கில அகரமுதலி யில் (Sanskrit-English Dictionary) குறித்துள்ளார்.

66

கரணியம் ஒரு கருமஞ் செய்யத் தூண்டுவதாதலாலும், ஏவு என்னும் சொல்லின் மூலமான ‘ஏ’ என்பதே ஏது என்னும் சொற்கும் மூலமாதலாலும், ஏது என்பது இடு என்னும் வினையொடு ஏதிடு எனப் புணர்ந்து ஏதீடு என்னும் வினைமுதல் நீண்ட தொழிற் பெயராதலாலும், இத் தொழிற்பெயர், ‘கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு" என்னும் தொல்காப்பிய அடியில் (பொருளியல், 13) ஆளப் பெற்றிருத்தலாலும், வடமொழிக்கு முந்தியது தென்மொழியாதலாலும், ஏது என்னும் சொல் தென் சொல்லே யென்று கொள்ளப்பெறும். அது குற்றியலுகரத்துடன் உயிரேறித் தென் மொழிப் புணர்ச்சி கொண்டதும், அதன் தென்சொற்றன்மை யினாலேயே என அறிக.

முத்து என்னும் தென் சொல் ஐயர் என்னும் சொல்லொடு புணரின் முத்தையர் என்றாவதே இயல்பாயினும் இக்காலத்துச் சிலர் அதை முற்றுகரமாக வொலித்து முத்துவையர் என்று புணர்ப்பது போன்றதே, ‘ஏதுவின் உணர்த்தலும்” என்னும் தொல்காப்பியத் தொடரும் (கற்பியல், 27) ஏதுவின் முடித்தல்” என்னும் நன்னூற்றொடரும் (14) என அறிக.

66

தாது என்னும் சொல்லின் வேர்ப்பொருள் நுறுங்கு அல்லது தூள் என்பதே.

ததைதல் = 1. சிதைதல். “சமந்ததைந்த வேல்” (பதிற். 70 : 3)

2. நுறுங்குதல்.

ததைந்தது தாது.

தாது = 1. நீறு, பொடி, (மதுரைக். 399, உரை)

2. பூந்தாது (பூஞ்சுண்ணம்)

66

“தாதுண் வண்டினம்” (மணிமே. 4 : 20)