உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

73

அடுத்த ஆண்டிலே ஒரு மாநாடு நடக்கும். அது சமற்கிருத எதிர்ப்பு மாநாடு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆட்சி மொழிகள் மூன்றாகத்தான் இருக்க முடியும். ஆங்கிலம், தமிழ், இந்தி. ஆங்கிலம் எல்லாருக்கும் பொது. தமிழ் தமிழ்நாட்டிற்குரியது. இந்தி இந்தி வழங்குகிற நாடுகளுக்கு, அதை விரும்புகிற நாடுகளுக்கும் பொதுவாக இருக்கட்டும் இந்த மூன்று மொழிகள் தாம் இருக்க வேண்டும். இதுதான் நடுநிலையான முடிபு. ஆங்கிலம் இருந்தே தீர வேண்டும்; இந்தியா முழுவதற்கும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே இந்தி இங்கு இருக்கவே கூடாது. தமிழும் ஆங்கிலமுந்தாம் இருக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையப் பலகை களிலோ, அரசியல் அலுவலகங்களிலுள்ள பெயர்ப் பலகைகளிலோ இந்தி எழுத்து இருக்கவே கூடாது. இருப்பதாக விருந்தால் இந்திய நாடுகளில் (மற்ற மாநிலங்களில்) உள்ள அலுவலகங்களில் உள்ள பலகைகளிலும் தமிழ் எழுத்தும் இருக்க வேண்டும். (நீண்ட கையொலி). அங்குத் தமிழ் இருக்கக் கூடாதென்றால் இங்கும் இந்தி இருக்கக் கூடாது. அந்த நிலைமை வந்தாலொழிய நமக்கு விடிவில்லை. எவ்வளவொ மேலும் மேலும் சொல்லிக் கொண்டே வருகிறோம். மேலும் மேலும் இந்த இந்தியும் நெருங்கிக் கொண்டே வருகிறது. இப்பொழுது யாரும் அதைத் தடுப்பதா யில்லை. அவர்கள் தங்கள் நிலைகளைக் காத்துக் கொள்வதே பெரிதும் இடர்ப்பாடாயிருக்கிறது. எனவே நாம்தாம் எல்லா நிலைகளிலும் விழிப்பா யிருக்க வேண்டும்.

இனி, அடுத்து நடைபெற விருக்கும் சமற்கிருத மாநாடு பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டியிருக்கின்றது. நமக்கு சமற்கிருதம் தேவையே இல்லை. இந்தச் சமற்கிருதத்தைப் பற்றித் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தமிழ் வடக்கே போய்த் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறினது. அந்த ஆரியத்திலே ஒரு பகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிய ஒரு தொகுதி ஆரியர்கள்தாம் இந்தியாவிற்கு வந்தார்கள்.அவர்கள் இந்தியா விற்கு வந்தவுடன் அவர்கள் பேசிய மொழி வழக்கற்றுப் போய்விட்டது. ஏனென்றால் அவர்கள் ஒரு சிறு கூட்டத்தாராக இருந்ததாலும், அக்கால் வடக்கே இருந்த மக்கள் பேரளவினராக இருந்ததாலும், கடலில் காயம் கலந்தது போல் அம்மொழி ஒன்றுமில்லாமற் போய் விட்டது. அந்த வழக்கற்றுப் போன ஆரிய மொழியுடன், அக்கால் வட இந்தியாவில் வழங்கி வந்த வட திராவிட மொழியான பிராகிருதம் கலந்து தான் வேதமொழி (Vedic Language) ஏற்பட்டது. அந்த மொழியும் பேச்சு மொழியாக இல்லாமல் எழுத்து மொழியாக மட்டுமே இருந்தது. பிராகிருதத்துடன் அந்த ஆரியமொழி கலந்ததால் தான், மேனாட்டு ஆரிய மொழிகளில் உள்ள எகர ஒகரம் இதில் இல்லாமற் போயின. இந்தியிலும்