உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாகி, இயற்கையும் செயற்கையு

மாகிய இருவகையா யிருப்பது. அவற்றுள், இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் அமைவது; செயற்கையாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது.

ஒழுக்க மென்பது அகம் புறமென்னும் இருவகைத் தூய்மை. அவற்றுள், அகத்தூய்மையாவது மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களும் தூயவா யிருத்தல்; புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, உறையுள் முதலியன தூயவாயிருத்தல்.

  • பரிமேலழகர் திருக்குறளுரைப் பாயிரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி “ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்” என்று கூறியுள்ளார். இஃது எல்லார்க்கும் பொதுவான உயர்தர வொழுக்கமன்று. இதை அவ் வுரையாசியரே மீண்டும்.

“அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடை மையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புகளொழித்து, எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி, இல்லறந் துறவ மென இருவகைநிலையாற் கூறப்பட்டது என்று நூலாசிரியர் கருத்திற்கேற்பக் குறித்துள்ளார். ஆதலால் ஒழுக்கமென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கரணத் தூய்மையே யன்றிக் குலந்தொறும் வேறுபட்ட வருணாச்சிரம தருமமன்று.

இல்லறத்தில் அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஒருநிகரவா யெண்ணப் படும்; துறவறத்தில் அகத்தூய்மை புறத்தூய்மையினும் பன்மடங்கு சிறந்ததா

யெண்ணப்படும்.

ஒருவன் எத்துணை எளியவனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள் களையும், உள்ளும் புறம்பும் தூயவாய் வைத்துக்கொள்வதே நாகரிகமாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டுவதும், கூழானாலுங் குளித்துக் குடிப்பதும், குடிலானாலுங் கூட்டிக் குடியிருப்பதும் உயர்தர நாகரிகமே. அழகியனவும் விலையுயர்ந்தனவுமான உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறை யுண்பதும், மேனிலையும் அகலிடமுமுள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலையுயர்ந்தனவுமான வாகனங்களிற் செல்லுவதும்,இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவை போன்ற பிறவும், அறிஞரும் அறிவிலிகளுமான செல்வர்க்கே யுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி நாகரிக வாழ்க்கையாகா. இவற்றை நாகரிகமென் றெண்ணுவது மேலைப் புது நாகரிகம்பற்றிய திரிபுணர்ச்சியாகும்.

மேலைக் கல்விகற்று மேனாட்டுடை யணிபவரெல்லாம் நாகரிகத்திற் சிறந்தரென் றெண்ணுவதும் அறியாமையே. கல்வி எம்மொழியினு மிருக்கலாம். உடையுந் தட்பவெப்பநிலைபற்றித் தேசந்தோறும் வேறுபடுவதாகும். நாகரிகத்திற்கு இன்றியமையாத வேளாண்மை (பிறரை யுபசரித்தல்) தாழ்மை முதலிய சிறந்த குணங்களை, மேலை நாகரிக மறியாத நாட்டு மக்களிடையே மிகுதியாய்க் காண்கின்றோம்.