பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

பிரதாப முதலியார் சரித்திரம்

உடனே பெண்சாதிக்குப் புத்தி வந்தது. அவளுடைய பிடிவாத துர்க்குணத்தை விட்டுவிட்டாள்” என்றேன்.

இந்தக் கதையைக் கேட்டவுடனே ஞானாம்பாள் சிரித்த சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கும் சிரிப்பு வருகிறது.




22-ஆம் அதிகாரம்
பிறவாக் குழந்தையை ஸ்வீகாரம் கேட்டுப்
பிரமாதம் விளைதல்


முந்தின அதிகாரத்திற் சொல்லியபடி ஞானசல்லாபங்களிலும் கிருகஸ்தாச்சிர தர்மங்களிலும் சந்தோஷமாகக் காலம் போக்கிக் கொண்டு வந்தோம். கலியாணத்துக்கு முன்பு பிடாரியைப் பிடித்துத் தள்ளினாலும் போகாமலிருந்த காலம் இப்போது வாயு வேகம் மனோ வேகமாக ஓடத் தலைப்பட்டது. கலியாணத்துக்குப் பின்பு ஒன்றரை வருஷம் ஒன்றரை நிமிஷம்போற் பறந்துவிட்டது. நாங்கள் இரண்டாவது தடவை சம்பந்தி முதலியார் வீட்டில் இருக்க வேண்டிய ஆறு மாசமும் கடந்துபோய் விட்டதால் ஞானாம்பாளை என் வீட்டுக்கு வரும்படி உத்தரவு செய்து நான் முந்திப் போய்விட்டேன். அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்பு சம்பந்தி முதலியார் என் தகப்பனாரிடத்திற்கு வந்து “ஞானாம்பாள் கர்ப்பவதியாயிருப்பதாக அவளுடைய தாயார் சொல்லுகிறாள். அவளுக்கு முதற் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்கு மென்று, அவளுடைய ஜாதகத்தில்