பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவராஜப்‌ பிள்ளை உபசாரம்‌

161

தாய் தகப்பன்மார்களுடைய சண்டைகளெல்லாம் பிள்ளைகளின் மேல் இருக்கிற பக்ஷத்தினால் விளைகின்றனவே அல்லாமல் மற்றப்படி அல்ல. உம்முடைய மாமனார் தம்முடைய மகள் பிள்ளை தமக்குப் பிள்ளையாயிருக்கவேணுமென்று அபேக்ஷித்து அந்தப் பிள்ளையைத் தமக்கு ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டார். உமது தகப்பனார் தம்முடைய பேரப் பிள்ளையைப் பிரிய இஷ்டமில்லாமல் ஆக்ஷேபித்தார்; ஆகையால் உங்கள் மேலும் உங்கள் சந்ததிகளின் மேலும் அவர்களுக்கு உண்டாயிருக்கிற பக்ஷத்தினால் அந்தச் சண்டை விளைந்ததென்பது நிதரிசனமாயிருக்கின்றது. அநேக சமயங்களில் பொல்லாங்கிலிருந்து சுவாமி நன்மையை விளைவிப்பது போல் இந்தச் சண்டையினால் எனக்கு ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். இந்தச் சண்டை நேராவிட்டால் உங்களை இப்போது தரிசிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்குமா?” என்றார். இவ்வகையாகச் சல்லாபித்துக் கொண்டு அவருடைய அரண்மனையிலே போய்ச் சேர்ந்தோம். அங்கே எங்களுக்கு நடந்த உபகாரங்களும் மரியாதைகளும் இப்படிப்பட்டது என்று விவரிப்பது எளிதல்ல. தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் என்னைவிட்டு ஒரு நிமிஷமாவது பிரிகிறதில்லை. அவருடைய பத்தினியும் தங்கையும் தங்கை மகளும் ஞானாம்பாளை விட்டுச் சற்றும் பிரிகிறதில்லை. ராஜோபசாரங்களும் வேடிக்கை விநோதங்களும் செய்து எங்களைச் சந்தோஷிப்பித்தார்கள்.



11