பொழுது விடியாதிருக்கச் செய்தது
253
நாளைக்கு வழக்குப்படி பொழுது விடிந்தால் உனக்கு இறுதி உண்டாகுமென்பது உறுதி தான். இவ்விரண்டில் ஒன்று தெரிந்தபிறகு தான் மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சொல்லி மூர்க்காவேசத்துடன் வீட்டுக்குப் போய் விட்டான்.
அங்கே இருந்தவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து ”யானை தன் தலை மேலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வது போல, நீயே உனக்குத் தீங்கைத் தேடிக்கொண்டாயே! பொழுது விடியாதபடி செய்ய உன்னால் கூடுமா?” என்று என்னத் தூஷித்தார்கள். அநேகர் நான் சொன்னபடி நடந்தாலும் நடக்குமென்று பயந்துகொண்டு அன்று இரா முழுதும் தூங்காமலிருந்ததாகக் கேள்விப்பட்டேன். நானும் அந்த இரா முழுதும் நித்திரை செய்யாமல் மந்திர தந்திரங்கள் செய்வது போல மாமாலம் பண்ணினதுந் தவிர ஒரு வெண்பாவும் பாடிப் பிரசுரஞ் செய்தேன்:—
முடியரசன் போனபின்பு மூர்க்கரெல்லாங் கூடிக்
குடியரசென் றோர்பெயரைக் கூறி—நெடிய
பழுதே புரியுமிந்தப் பாழூ ரதனிற்
பொழுதே விடியாமற் போ.
மறு நாள் கிரகணம் பிடித்துக் கொண்டபடியால் வெகுநேரம் வரையிற் பொழுது விடியவே யில்லை. இதைப் பார்த்த உடனே பட்டணம் கிடுகிடுத்துப் போய்விட்டது. அந்த நியாயாதிபதி பொழுது விடியவில்லையென்று தெரிந்த உடனே புறப்பட்டுக் காவற்கூடத்துக்கு ஓடி வந்தான். அவனைக் கண்ட உடனே ஜனங்கள் மண்ணை வாரி இறைத்து ”அட பாவி! சண்டாளா! அந்த புண்ணியவானுக்கு விரோதமாகத் தீர்மானஞ் செய்து பொழுது விடியாதபடி பண்ணிவிட்டாயே!” என்று வாயில் வந்தபடி அவனைத் தூஷித்தார்கள். அவன் என்னிடத்தில் வந்து நமஸ்காரஞ் செய்து “சுவாமி! உங்களுடைய மகிமையை அறியாமல் அபராதஞ் செய்து