பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

பிரதாப முதலியார் சரித்திரம்

வெகு காலமாய்ப் பாக்கியிருக்கின்றன வென்று கேள்விப்பட்டு உடனே எல்லாரையும் அழைத்துக்கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார்” என்று தெரிவித்தார்கள். உடனே நாங்கள் எல்லாரும் புறப்பட்டுக் கொலுமண்டபத்துக்குப் போனோம். புது ராஜாவினுடைய மாதிரி தெரியாமையினால் எப்படித் தீர்மானஞ் செய்வாரோவென்று நான் பயந்து அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவதுபோற் போனேன். அப்போது இராக்காலமாகவும் அநேக ஜனக்கூட்டமாகவும் இருந்தபடியால் அரசருடைய முகம் எனக்கு நன்றாகத் தெரியவில்லை. அவர் மிருது பாஷியாயிருந்தபடியால் அவருடைய குரலும் நன்றாகக் கேட்கவில்லை.

ஒரு உத்தியோகஸ்தன் என்னுடைய வாதியான சக்கிலியன் பெயரைச் சொல்லிக் கூப்பிட சக்கிலியன் சபை முன்னே வந்து “இந்த மனுஷன் என்னுடைய ஜோட்டை வாங்கி உபயோகித்துக்கொண்டு அதற்காக என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக்கொண்டவன் அந்தப்படிச் செய்யாததினால் என்னைச் சந்தோஷப்படுத்தும்படி உத்தரவு செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். நானும் என்னுடைய எதிர்வாதங்களைத் தெரிவித்தேன். அரசர் சற்று நேரம் மௌனமாயிருந்து பிறகு சக்கிலியனை நோக்கி “நாம் இப்போது அரசனாக வந்திருக்கிறோம்! உனக்கு எப்படி இருக்கிறது?” என்று வினவினார். அவன் “எனக்கு சந்தோஷமாயிருக்கிறது” என்றான். உடனே அரசர் “நீ சந்தோஷமாயிருப்பதாக ஒப்புக் கொள்ளுகிறபடியால் ஜோட்டுக்காக அந்த சந்தோஷத்தை எடுத்துக்கொள்” என்று சொல்லி அவனைப் பிடித்துத் தள்ளிவிடும்படி உத்தரவு கொடுத்தார்.

இரண்டாவது சூதாடிகள் வந்து, சும்மாவை வாங்கிக் கொடுக்கும்படி வேண்டினார்கள். அரசர் சற்று நேரம் ஆலோசிக்கிறவர் போல மௌனமா யிருந்து, பிறகு சிம்மா சனத்துக்குப் பக்கத்தில் வெறுமையா யிருந்த ஒரு