348
பிரதாப முதலியார் சரித்திரம்
45-ஆம் அதிகாரம்
இராஜாங்க பரித்தியாகம்—தாய் தந்தையரைச்
சந்தித்தல்—ஆநந்த வல்லியின் மகுடாபிஷேகம்
ஜனங்கள் எல்லாரும் போனபின்பு, ஞானாம்பாள் என்னைப் பார்த்து “அத்தான்! அந்த ஜனங்கள் சொல்வதைப் பார்த்தால் விபரீதமாயிருக்கிறது. அவர்கள் நம்முடைய இஷ்டப்படி அந்தப் பெண்ணுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதித்தது சந்தோஷமான காரியந்தான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு நான் மாலை சூட்டி, ரோம் பட்டணத்தை ஒரு காலத்திலே மூவேந்தர்கள் ஆண்டது போல நீங்களும் நானும் அந்தப் பெண்ணும் ஆகிய மூவருங்கூடி அரசாளவேண்டுமென்பது ஜனங்களுடைய தாற்பரியம் போலக் காணப்படுகிறது. இந்தத் தர்மசங்கடத்துக்கு என்ன செய்கிறது?“ என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “நீ சம்மதித்துத்தானே அந்தப் பெண்ணுக்கு மாலை சூட்ட வேண்டும்? உன்னுடைய சம்மதமில்லாமல் யார் என்ன செய்யக்கூடும்? அந்தப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகஞ் செய்துவிட்டு நாம் ஒருவருக்குந் தெரியாமல் இந்த ஊரை வீட்டுப் புறப்பட்டுக் கம்பி நீட்டிவிட்டால் அப்பால் ஜனங்கள் என்ன செய்வார்கள்? ஆகையால் நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்“ என்று அவளுக்குத் தேறுதல் சொன்னேன்.
அன்றையத் தினம் சாயரக்ஷை வீதிக்கு வீதி பேரிகை முழக்கமும் ஜனங்களுடைய சந்தோஷ ஆரவாரமுங் கேட்டு “அது என்ன சப்தம்?” என்று சாரணர்களை விசாரித்தோம். அவர்கள் எங்களைப் பார்த்து “மகாராஜாவுக்கும் பழைய அரசருடைய புத்திரிக்கும் வருகிற சுக்கிரவாரங் காலையில்' கலியாண முகூர்த்தமும் அன்றையத்தினஞ் சாயங்காலம் அந்த ராஜபுத்திரிக்குப் பட்டாபிஷேகமும் நடப்பதாகவும் அதற்காக எல்லாரும் ஊரை அலங்கரிக்க வேண்டுமென்று முரசு முழக்குகிறார்கள். அதைக் கேட்டு ஜனங்கள் எல்லாரும் ஆநந்த கோஷம் செய்கிறார்-