பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

"பிற்பாடு ஏதோ கடவுளுடைய அனுக்ரஹத்தால், என்னை வளர்த்த பிதாவாகிய சாந்தலிங்கம் பிள்ளை, ஆரோக்யம் அடைந்து பிழைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமே! அவர் சொன்ன விருத்தாந்தத்தைக் கேட்டது முதல் எனக்கு உண்டாகியிருக்கிற கிலேசமும் துக்கமும் கடவுளுக்குத் தான் தெரியும். அந்தக் காரணத்தைப் பற்றித் தான் சில நாளாக நான் சரியாய் விளையாடாமலும் பேசாமலும் இருந்தேன். என்னைப் போல் நிர்ப்பாக்கியர்கள் உலகத்தில் இருப்பார்களா? தாய் தகப்பன் இன்னாரென்று தெரியாத பிள்ளைகளும் இருக்குமா? பால் குடிக்கிற குழந்தையைக் கைவிடுகிற தாய் தந்தைமார்களும் பூமியில் இருப்பார்களா? லோகாபவாதத்தை யார் தடுக்கக் கூடும்? தடாகத்தில் விழுந்த என்னைக் கரையேற்றி ஏன் என்னைப் பழிக்கும் நிந்தைக்கும் ஆளாக்கினீர்கள்? நான் அப்போதே இறந்து போயிருந்தால் என்னுடைய துக்கமும் அவமானமும் என்னுடன் இறந்துபோயிருக்குமே" என்று சொல்லிக் கனகசபை தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டு அழுதான். அவனுடைய துக்கத்தைப் பார்த்து, நானும் ஞானாம்பாளும் கூட அழுதோம். பிற்பாடு எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, எங்களாலே கூடிய வரையில் அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியும் அவன் மனந் தேறவில்லை. அவனுடைய மனோ வியாகூலத்தால், அவன் நாளுக்கு நாள் துரும்பு போல் ஆனான். அவனுடைய சங்கதியை வெளிப் படுத்தினால், அவனுக்கு அவமானம் உண்டாகும் என்று நினைத்து, அதை நாங்கள் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் தாயார் மட்டும், அந்த ரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு, கனகசபையிடத்தில் அத்தியந்த கிருபையும் அன்பும் பாராட்டி வந்தார்கள்.