பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் ஆதித்த சோழன்

33

எண்ணம் இத்தகைய பெருவேந்தன் உள்ளத்தில் உதிப்பது இயல்பேயாம். இவன் எடுப்பித்த கற்றளிகளுள் திருப்புறம் பயத்திலுள்ள கோயிலையே முதன்மை வாய்ந்ததாகக் கொள்வது மிகப்பொருந்தும். கி. பி. 880-ஆம் ஆண்டில் திருப்புறம்பயத்தில் நடைபெற்ற பெரும்போரின் பயனாக ஆதித்தனுக்குச் சோழமண்டலம் முழுமையும் ஆட்சிபுரியும் பேறு கிடைத்தது என்பது முன்னர் விளக்கப்பெற்றது. அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இவ்வேந்தன் திருப்புறம்பயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்பால் எல்லையற்ற அன்புடைய வனாய் அப்பெருமானது திருக்கோயிலை அரிய சிற்பத்திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாக எடுப்பித்து அதற்கு ஆதித் தேச்சுரம் என்ற பெயரும் வழங்கினான். முற்காலத்தில் அக் கோயில் ஆதித்தேச்சுரம் என்றே வழங்கப்பெற்று வந்தது என்பது அதிற் காணப்படும் கல்வெட்டுக்களால் புலனா கின்றது. அன்றியும், அக்கோயிலிற் காணப்படும் ஆதித்த சோழன் கல்வெட்டும் அவனால் அக்கோயில் முதலில் கற்றளி யாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதை உறுதிப் படுத்துதல் அறியத் தக்கது. இவன் சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாக ஒழுகிவந்தமையின் வேறு சிவன் கோயில்களும் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் கொங்கு நாட்டிலிருந்து பொன் கொண்டு வந்து தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன்வேய்ந்த செய்தி முன் கூறப்பட்டது. சைவத் திருமுறைகளுள் முதல் ஏழும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி என்ற பெரியார், இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியினால் நன்கு விளங்கும்.


1. S. 1. I., Vol. VI., No. 30. 2. (a) ‘சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குலமுதலோன்' திருத்தொண்டர் திருவந்தாதி--பா. 65.