உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

31


தென்னகத்தில் ஓர்துறவி விழித்தி ருந்தார்
              பசித்திருந்தார்; தீரர் நேரு,
தன்னகத்தில் விழித்திருந்தார், சிறையதனில்
              பசித்திருந்தார், தனித்தி ருந்தார்;
முன்னொருசெந் தமிழ்ப்புலவர் பெரும் பசியால்
              பறந்திட்டார்: முகமும் சோர்ந்தார்.
பன்மையிலே ஒருமைகண்ட பண்டிதரும்
              பலகாலம் பறந்தார் வானில்.

கங்கையிலே, யமுனையிலே, காவிரியின்
             கரையினிலே, கத்தித் தத்திப்
பொங்கு கடல் மீதினிலே, பொய்கையிலே,
             வைகையிலே, புன்செய், நன்செய்
எங்கெங்கும் தெளித்திடுவீர் என்சாம்பல்
              தனையென்றே எழுதி வைத்தார்.
இங்கிவர்போல் எழுதிவைத்தோர் எவரேனும்
               நாட்டிலுண்டோ ? இருந்தால் சொல்வீர் !

எவரைப்போல் இவரென்னும் பேச்சுக்கே
               இடமில்லை; இந்த நாட்டில்,
இவரைப்போல் எவரென்னும் பேச்சுக்கே
               இடமுண்டாம்; இவர்க்கும் இங்கோர்
தவறுண்டாம் எனக்கூறின் முன்கோபம்
               ஒன்றேதான் தவறாம் ! சின்ன
துவரையுள்ளம் கொண்டோரே இக்குறையைப்
               பெருங்குறையாய்ச் சொல்வர் கண்டீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/33&oldid=1871857" இலிருந்து மீள்விக்கப்பட்டது