32
புகழ் மாலை
(கும்மி)
கண்ணில் கருணையும் கைதனில் நூலையும்
கல்வியை நெஞ்சிலும் வைத்தவராம்.
மண்ணில் அடியையும் விண்ணில் புகழையும்
மார்பில் மலரையும் வைத்தவராம்.
பொய்யழுக் கற்றநல் அந்தணராம் - புவி
போற்றும் புதுமை புரிந்தவராம்;
செய்யும் செயலில் சிறந்தவராம் - பெருந்
தேசத்தை வாழ்விக்க வந்தவராம்.
குழந்தையை நேசிக்கும் பண்டிதராம் - மூடக்
கொள்கையைக் கண்டிக்கும் பண்டிதராம்
விழுந்த மழைத்துளி போன்றவராம் - புது
விஞ்ஞான ஏக்கம் நிறைந்தவராம்.
சாதி மதங்கள் கடந்தவராம் - அவர்
சத்திய கீர்த்தியைப் போன்றவராம்;
நீதியும் நேர்மையும் கொண்டவராம் -பகை
நெஞ்சிலும் நட்பாய் நுழைந்தவராம்.
தூங்கிய வேங்கை விழித்ததுபோல் - புகைத்
தூக்கம் கலைந்த நெருப்பதுபோல்
ஆங்கிலர் ஆட்சியை நின்றெதிர்த்தார் - உயிர்
அல்லவோ பாரதம் என்றுரைத்தார்.
ஆலையும் நற்கல்விச் சாலையு மேநமக்
காலய மாகுமென் றேயுரைத்தார்.
மேலை நிலத்தவர் விந்தையைக் கண்டுநாம்
வேடிக்கை பார்ப்பதோ என்றுரைத்தார்.