இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
37
அரசியலில் அக்பரைப்போல் கெட்டிக் காரர்
அனுபவத்தில் ஈரோட்டுப் பெரியார் போன்றார்
புரிந்துகொள்ளா திருக்கையிலும் பேச மாட்டார்
புரிந்துகொள்ளும் போதுமிவர் பேச மாட்டார்.
புரிந்தபின்னர் இவரதிகம் பேச மாட்டார்.
புவியிலிவர் பெயர்பரவா இடமே இல்லை.
விரிந்தபுகழ் உடையோர்க்கும், கதிரோனுக்கும்,
விண்ணுக்கும் விளம்பரங்கள் தேவை யுண்டோ?
அன்றிருந்த மன்னர்களின் கரங்கள் நீளம்,
அவ்வாறே இவர்கரங்கள் மிகவும் நீளம்.
அன்றிருந்த மூவேந்தர் செயல்கள் யாவும்
அருஞ்செயல்கள்; இவர்செயலும் அவ்வா றேயாம்.
குன்றிருந்தால், மலையிருந்தால், மலையின் பக்கம்
குளிர்ந்தவொரு சிற்றருவி இருந்தால், ஆங்கே
சென்றவர்கள் பயனடைவர்; காம ராசர்
சிந்தனையை ஆதரித்தால் நாடு வாழும்?