உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

புகழ் மாலை


பெருமீசை வைத்திருந்த பன்னீர்ச் செல்வப்
               பெருந்தகையார் தனையிழந்து ஏங்கும் போது,
அரும்பைப்போல் சிறுமீசை வைத்த இன்னோன்
               அரியதுணை யாயிருப்பான் என்று எண்ணிப்,
பெருங்கனவு நாம்கண்டு வந்தோம். கண்ட
                பெருங்கனவை நிறைவேற்றும் செம்மல் தன்னை;
மரணமெனும் உயிர்பிரிக்கும் சக்தி வீழ்த்த;
                மாணிக்கம் போன்றவனை இழந்து விட்டோம்!

மலரிருந்தால் மணம்வீசும்; மதுவை நல்கும்.
                மறுபடியும் காயாகும்; கனியும் ;இந்த
நிலையாவும் நிகழ்தற்குக் கொடியில், அப்பூ
                நிச்சயமாய் நிலைத்திருத்தல் வேண்டும். ஆனால்
கலை அழகன் தான் இருபத் திரண்டி லேயே
               கண்மூடி விட்டானே என்ன செய்வோம்!
குலைத்தெங்கு வீழ்ந்ததென வீழ்ந்திடாமல்,
               கொள்கைதனை இவன்போன்று செழிக்கச் செய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/48&oldid=1871879" இலிருந்து மீள்விக்கப்பட்டது