88 புதிய கோணம்
காமத்தைப்பற்றி அறிந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்த ஆழ்ந்த கருத்தைத் தான் வள்ளுவப் பெருந்தகை சிலர் அதன் செவ்வி தலைப்படுவார் என்று பேசிச் செல்கிறார்.
வள்ளுவரின் காமத்துப்பாலின் அடிப்படையில் நின்று கண்டால் காமம் என்பது மலரைவிட, மென்மையுடையது என்றும் அது ஒரு மனப்பக்குவ நிலையாகும் என்றும் அறிய முடிகிறது. அந்த மனப் பக்குவத்தை அறிவதே மிகப்பெரிய காரியமாகும். அறிந்த பின்னர் அதனைப் பயன்படுத்துதல் என்பது மிகமிகப் பெரிய காரியமாகும். மென்மையுடைய மலரானது, தான் இருக்கும் இடம், மண் வளம், தட்ப வெப்ப நிலைகள், நீர்வளம், காற்று ஆகிய அனைத்தினாலும் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். இவை அனைத்தும் இருக்கக்கூடிய நிலையில்தான் மலர் முழுத்தன்மை பெற்று மணம் பரப்பும். இவற்றுள் யாதானும் ஒன்றோ பலவோ குறைந்து விடின் மலர் வடிவளவில் மலர் என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்குமே தவிர முழுத்தன்மை பெற்றதாக அமையாது. அதேபோல் காம இன்பத்தை நுகர்வதற்குக்கூட ஒருவகை மனநிலை வேண்டும். அம்மனநிலை இல்லாமலும் காமம் அநுபவிக்கப் படுவது இல்லையோ எனில் உண்டு, என்றாலும் அது முழுத்தன்மை பெற்றதாக ஆகாது. மலர், பெயர் அளவில் மலராக இருப்பது போல இக்காமமும்