உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

"வேலப்போய்! உன் கண்ணாலத்திலே ஊர்க்கோலம் உண்டா டோய்!" என்று கேலி செய்வார்கள், ஒத்த வயதினர்; "ஆமாம்டா! செய்தா என்னடா! ஆனை மேலே அம்பாரி, குதிரை மேலே மேளதாளம், பொய்க்கால் குதிரை கூத்தாட்டம், எல்லாம்தான் நடக்கப்போவுது. பவுன், பவுனாய் விளையுது, என் கொல்லையிலே... நீங்களெல்லாம் தான், பழைய மாதிரியாகவே, காரும் சிறுமணியும் விதைத்து விட்டு கிடக்கறிங்க, நான் 'குச்சிக்கிழங்கு' போட்டிருக்கறேன்... தங்கமாட்டம் விலைபோகுது, குச்சிக்கிழங்கு தெரியுமா.......தூரத்துச் சீமைக்கெல்லாம் வண்டி வண்டியாப் போகுது.....அதிலே கிடைக்கப்போற காசைத்தான் நம்பிகிட்டு இருக்கிறேன்......குச்சிக்கிழங்கு காசு ஆனதும் நாள் பார்க்க வேண்டியதுதான்." என்று வேலப்பன் உற்சாகத்துடன் கூறுவான்.

நகரத்திலே ஒரு வேலையாக வேலப்பன் போயிருந்த போது 'குச்சிக்கிழங்கு' பயிரிடுவதாலே கிடைக்கும் இலாபத்தைக் குறித்து கடைவீதியிலே பேசிக்கொண்டதைக் கேட்டு, பிறகு பல பேரிடம் அதைப்பற்றிய விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு குச்சிக் கிழங்கு பயிர் வைத்தான்...... யாரோ வியாபாரிகூட, பயிர் வளமாக வந்தபோது பார்த்து விட்டு, 'மாசூல்' முழுவதும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுவதாக வாக்களித்தார்; வேலப்பனுக்கு அதனாலே அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

செல்லாயியை அவன் சந்திப்பதென்பது, மாலை வேளைகளில் யாருமறியாமல், என்கிற விதத்தில் அல்ல.

கழனிப்பக்கம் இருவருக்குமே வேலை இருக்கும்—துரவுக்கு இருவருமே போகவேண்டிய அவசியம் நேரிடும், அப்போதெல்லாம் சந்திப்புதான்.

"தா! செல்லாயி! வாயேன், அதோ அந்தாலே இருக்கிற திருக்குளத்தண்டே, பூ பறிச்சுத்தாரேன், தாமரைப் பூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/10&oldid=1575580" இலிருந்து மீள்விக்கப்பட்டது