உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ம்மாடியோ...! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா...?

சாமி சாட்சியாச் சொல்றேன்...

பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கிட்ட வந்து 'கெக்கெபிக்கே'ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா...?

நானென்ன மாடப்புறாவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடியாந்து. உன் தோளிலே தொத்திக்கிட...

சினிமா பார்த்துப்பார்த்து, நீ வேண விளையாட்டு கத்துகிட்டே... இதொபாரு. எனக்கு அதெல்லாம் பிடிக்காது... சொல்லிட்டேன்.....

ஆமா, நீ இதுவரையிலே என்னிடம் சொல்லவேயில்லையே, உனக்குப் பொரிவிளங்கா உருண்டைன்னா, ரொம்பப் பிரியமாமே...இந்தா, இரண்டுதான் மிச்சமாச்சி...

உன் கண்ணுக்கு நான் அழகுன்னா, ஊரார் அவ்வளவு பேருமா, என்னை அழகின்னு சொல்லுவாங்க; குப்பி பாட்டி என்னை என்னா சொல்லும் தெரியுமா? போடி போடி கோண வடுக்காரி, எப்பப் பார்த்தாலும் இளிச்சிக்கிட்டுக் கிடக்கறயே, பொண்களுக்கு இதுவா இலட்சணம்னு சொல்லும்...

அப்பப்பா! போதும்போதும்னு ஆயிடுது உன்னண்டெ சிக்கிவிட்டா...இது என்ன கன்னமா, பச்சரிசி மாங்காயா...?. நகத்தைப்பாரு சாமியாரு மாதிரி....! தா! ரொம்ப விளையாடாதே வெட்கமா இருக்கு... சிரிப்பு பகில்னுவருது. அதோ அந்தா பக்கம் சோளக் கொல்லையிலேதான் சொக்கப்பன் இருக்கறான்... அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந்திச்சி, அவ்வளவுதான், வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டிவிட்டுத்தான் தூங்கப் போவான்.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/6&oldid=1559271" இலிருந்து மீள்விக்கப்பட்டது