84
நா. வானமாமலை
இதற்கு விளக்கமும் வேண்டுமா? இது நமது போலித்தனத்தினின்று நம்மை மீட்டு, உண்மையான நியாய உணர்வை எழுப்பவில்லையா? உங்களுடைய புதுக்கவிதை இலக்கணப்படி கவிதை வடிவம் அமையாததால் இது கவிதையில்லையா?
தனி மன உளைச்சல்களைக் கவிதையாக்கி, தேசத்தையும் உலகத்தையும் மறந்து, மனித இன உணர்வினின்றும், மனித இன விடுதலை ஆர்வத்தினின்றும் தம்மைத் துண்டித்துக் கொண்டு, தன் மனத்தே புதைந்து, தன்னையே தேசமாகவும் உலகமாகவும் கண்டு, தனது மாயா சுதந்திரமே மனித சுதந்திரமென நம்புகிற மனநோயாளிகளுக்குப் பரிணாமன் கவிதை கசக்கத்தான் செய்யும். மனித இனத்தின் மனச்சாட்சியாய் ஒலிக்கும் கவிதை அவர்களது தனிமனிதப் பேய்ப் படைப்புக்களை மாயையெனக் காட்டிவிடுகிறது.
தேசத்திற்கு நாம் கிடைத்துவிட்டோம்
ஆனால் இன்னும்
தேசம் நமக்குக் கிடைக்கவில்லை!
இப்படி ஒர் ஏக்கத்தோடு நிறுத்திவிடுவார்கள் சமூக விமர்சனப் புதுக்கவிஞர்கள்.
தேசம் நமக்குக் கிடைக்க, நாம் செய்யும் முயற்சிகள் வீணாகாது என்ற நம்பிக்கை சுடர்விடப் பாடுகிறார் பரிணாமன்.
பரிணாமன் கம்யூனிஸ்டுதான். அதைச் சொன்னவுடன் ஒரு குடும்பப் பெண்ணை வேசியென்று திட்டிவிட்ட திருப்தியில் மனம் குளிர்கிற அற்ப மனம் படைத்தவனைப்போல ‘ஆமாம் அவர் கம்யூனிஸ்டுதான், கவிஞனல்லன்’ என்று பூரித்துப் போகிறார் விமர்சக மன்னர்.
பரிணாமன் கம்யூனிஸ்டுதான். உலக உழைப்பாளி மக்களின் பொதுவான இலட்சியங்களிலும் ஆர்வங்களிலும், தன் தனிமனிதத்தைப் பறிகொடுத்து விட்டவர் பரிணாமன். தன்னை உலகத்திலிருந்து பிரித்துக்கொண்டு, மகாபாரதப் போரில் இரண்டு படையிலும் இன்றி, இடையே ஓடுகிற பன்றியைப் போல, மாபெரும் உலக சமுதாயப் போராட்டத்தில் கட்சி சேராமல் தனது மாபெரும் உள் மனத்தைக் களமாகக் கொண்டு பிளவுண்ட மனத்தின் இரு கூறுகளைப் போராட விட்டுச் சாவல் சண்டையில் குரூரக்களிப்படையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜமீன்தார்களைப்போல இவர்கள் மனப் போர் நடத்திக் கொண்டிருக்கட்டும். ஆனால் உலக மக்களின் மூலபலப் படையோடு மோத தங்கள் கவிதையம்புகளை எய்-