122
புது டயரி
“அப்படியானால் அவன் பட்டறையில் வைத்துத் தகடாகத் தட்டுகிறானே; அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?”
“இல்லை, இல்லை. தகடாக மாறி இறைவனுக்கே கவசமாகிவிடுகிறேன்.”
“பின்னே அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிலிட்டுக் கம்பியாக இழுக்கிறானே; அப்போது உன் உடல் நலிந்து நைந்து துன்புறுகிறாயோ?”
“இல்லை, இல்லை; நல்லவர்களையெல்லாம் தங்கக் கம்பி என்று என்னை உபமானமாகச் சொல்லும்படி ஆகிறேன். ஆகையால் அதனாலும் வருத்தம் இல்லை.”
“இவ்வளவினாலும் உனக்கு வருத்தம் இல்லையென்றால், நீ புலம்புவதற்குக் காரணம் இல்லையே! எதை நினைந்து அழுகிறாய்?” என்று ஏறெடுத்துப் பார்த்து நான்முகன் கேட்டான்.
“அந்தப் படுபாவி என்னை நிறுக்கும்போது தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமானமாக மற்றொரு தட்டில் குன்றி மணியை வைத்து நிறுக்கிறானே; அந்த அவமானத்தை என்னால் தாங்க முடிய வில்லையே!” என்று மறுபடியும் அந்தத் தங்கம் புலம்பியதாம்.
வரிசை அறியாப் பேதைமையை அழகாகக் கற்பனை செய்து வடமொழிக் கவிஞர் ஒருவர் இப்படிப் பாடியிருக்கிறார்.
சொற்பொழிவு செய்கிறவர்களுக்கு ஓர் அநுபவம் உண்டாவது இயல்பு. நன்றாகக் கேட்டு ரசிப்பவர்கள் கூட்டமாக இருந்தால், நம்மை அறியாமலே புதிய புதிய கருத்துக்களும் சுவையான உவமைகளும் புங்கானுபுங்க