புது டயரி
11
“நீ மற்றவள் அல்லவா?”
“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் வேறு, நான் வேறா நீங்கள் சங்ககாலக் கவிகளில் வரும் கணவன் மனைவி ஒற்றுமையைப் பற்றியெல்லாம் பேசுவீர்களே! இப்போது இந்த டயரி வந்து நம்மைப் பிரித்து விட்டதா?”
அவள் அழவில்லை. அடுத்த காட்சி அதுதான் என்று எனக்குப் பயமாகப் போய் விட்டது.
“இப்போது என்ன செய்யச் சொல்கிறாய்?”
“வீட்டுக் கணக்கு எழுத நல்ல நோட்டு இல்லை. இதைக் கொடுங்கள். இதில் எழுதுகிறேன்.”
“நானும் நினைத்ததுதான்.”
“என்ன நினைத்தீர்கள்?”
“டயரியில் வரவு செலவுகூட எழுதலாமென்று நினைத்தேன். என் உள்ளத்துக்குள் நீ இருக்கிறாய். ஆகையால் அதை உணர்ந்து கொண்டு, நான் செய்யாததை நீ செய்வதாகச் சொல்கிறாய். இந்தா, எடுத்துக் கொள்.”
இதைவிடவா முன் உளறின உளறலுக்காகக் கேட்கும் மன்னிப்புப் பயனுடையதாக இருக்கும்?
அப்பாடி என் தர்மபத்தினி டயரி எழுதும் அல்லலினின்றும் என்னை விடுதலை செய்து விட்டாள்!