74
புது டயரி
விரித்த புகையிலைக்குத் தியாகராச சாஸ்திரிகள் என்பவர் ஒர் உவமை சொல்வாராம். என் ஆசிரியப்பிரான் அதைச் சொல்வதுண்டு. சாஸ்திரிகள், அந்தக் காலத்தில் புதுக்கோட்டையில் இருந்த தமிழ் வக்கீல். வடமொழி, சங்கீதம் நன்கு அறிந்தவர், “எண்ணெய் வாணியன் கெளபீனம் போலே” என்று விரித்த புகையிலைக்கு உபமானம் சொல்வாராம். விரித்த புகையிலை சாரமற்றது. ஆனால் அதற்குச் சொன்ன உபமானம் சாரமுள்ளதாக இருக்கிறது.
பழனியில் தண்டாயுதபாணிக்கு அர்த்த சாமத்துப் பூஜையில் புகையிலையையோ சுருட்டையோ நிவேதனம் செய்வதாகச் சொல்கிறார்கள். அதன் உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். புகையிலையை ஒரு புலவர் பழனியாண்டவனிடம் துாது போகும்படி பாடியிருக்கிறார். அதற்குப் புகையிலை விடுதூது என்றுபெயர். அதை மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். புகையிலையின் பெருமைகளை அந்தச் சிறு நூல் அழகாகச் சொல்கிறது.
புகையிலை சமதர்ம உணர்ச்சியையே உண்டாக்கிவிடுகிறது. ஓர் அரசன் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தானம். அவன் புகையிலை போடுகிறவன். சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது புகையிலை போட எண்ணினான். கைவசத்தில் இல்லை. அருகே வயலில் உழுகிற உழவன் ஒருவன் வெற்றிலைப் பையை அவிழ்த்துப் புகையிலை போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மன்னன் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அவனிடம் போய்க் கையை நீட்டிப் புகையிலை கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டானாம். காட்டைக் காக்கும் மன்னனும் மாட்டை