பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புறப்பாடு


புறப்பட்டுப் போனேன், பொய்யாப்
புலமையால் பரிசில் வேட்டுப்
பிறப்பிட்ட மானம், வீரம், -
பிறவெலாம் பின்னின் றேங்கக்
குறிப்பிட்ட இடமூர் கூடக்
கூறாத நிலையில், கொண்ட
சிறப்பிட்ட தமிழே யென்னைச்
சேரிடம் சேர்க்கு மென்றே!

சீரிழைத் திருந்த வீட்டில்
சிவனை யிருத்திச் சேர
வேரிழைத் திருந்து நீண்ட
விரிதலைப் புளியன்,-வெய்யோன்
நேரிழைத் திருந்து காய்ந்தால்
நிழல்தர நேர்ந்த சாலை
பாரிழைத் திருந்த பாங்கில்
பையவே நடந்தேன் பார்த்தே!

கூட்டத்தை விட்டுக் கூட்டில்
குஞ்சுகட் கிரையைக் கொள்ளும்
நாட்டத்து நாரை யாய்நான்,
நல்லதோர் குளமாய் நல்லூர்த்
தேட்டத்தில், தெளிந்து சென்று,
தித்திக்கும் தமிழ்கேட் பித்தோ
ரோட்டத்தில் பரிசுங் கொண்டிங்
கூருற்றுண் டுவப்பித் தற்கே!

விருத்தனோ , விடலை யோ, நோய்
வேதனை தீர்க்க வேண்டித்
'திருத்துவா' னெனவே தேர்ந்து
தேகத்தைக் காட்டின், நாட்டு
மருத்துவன் மலர், வேர், வித்து,-
மற்றவும் மண்ணில் தேடும்
தரத்தினி லொருத்த னாய் நான்
தயங்காது நடந்தே னன்றே!