ரா.சீ.
91
59. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
பொன்மாலை உன் மார்புக்கு அழகு செய்கிறது. கால் அடியைத் தொடும் உன் கைகள் உனக்குத் தோற்றத்தைத் தருகின்றன. அழகிய தோற்றம் உடைய வழுதியே!
நீ யாவர்க்கும் உவந்து அளிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறாய்.
நீ மற்றவர்கள் யாவர் எத்தகையர் என்பதை ஆராய்ந்து அறிக: எது பொய் எது மெய் என்பது ஆராய்ந்து அறிக: பிறர் கூறும் பொய்மைக்கு அடி பணியாதே.
நீ பகைவர் மாட்டுச் சினத்தோடு எதிர்க்கவும்; கடலில் காலையில் எழும் ஞாயிறுபோல் அவர்களைக் காய்வாயாக; எம்மைப் போன்றவர்க்கு நீ திங்களைப் போல் அருள் செய்வாயாக.
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், தாள் தோய் தடக் கைத் தகை மாண் வழுதி! வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; தேற்றாய், பெரும பொய்யே; என்றும் காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத் திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
திணை - அது துறை - பூவை நிலை.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
60. சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்
கடல் நடுவே செல்லும் படகுகளில் ஒளிவிடும் விளக்குகளைப் போல் விண்மீன்கள் இடையே ஒளிவிடும் நிறைமதியைக் கண்டு காட்டு மயில்போல் சுரவழியில் செல்லும் விறலியும் யானும் அதனை விரைந்து தொழுதோம்.