uωμπά Φαθαάτ 425
ஆற்றாது புலம்புகின்றான். இவனுடைய அன்புள்ளத்தின் செறிவு இதனாற் காணப்படும். ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை, இன்னும் வாழ்தல் என்னிதன் பண்பே'எனத் தானும் அவளோடு சாவாது போயின நிலைக்கு வருந்துகின்றான் இவன். பிரிவுத்துயரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்ற சால்புக்கு இச் செய்யுள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் 181, 265
இவர் சோணாட்டார்; முகையலூரினர். இச் செய்யுளில் ‘கருங்கண் எயிற்றி காதல் மகனொடு கான இரும்பிடிக் கன்று தலைக்கொள்ளும் பெருங் குறும்பு உடுத்த வன்புல இருக்கை" என நயமாகக் கூறியதனால், இப் பெயரைப் பெற்றனர் போலும். சிறுகருந் தும்பி - சிறிய கரிய யானைக் குட்டி இவராற் பாடப் பெற்றோன் வலாஅர் கிழான் பண்ணன் என்பான். இவரது கையறுநிலைச் செய்யுள் அவனைக் குறித்துச் செய்யப் பட்டதென்றே கருதவேண்டும்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 173
இவன் சோழ மன்னருள் ஒருவன். தன்னாட்டு வேளாண் குடிப் பெருமகனாகிய பண்ணன் என்பானின் சோற்றுக் கொடையை வியந்து இவன் பாடுகின்றான்; பாராட்டுகின்றான்; அக்கால மன்னர்களது புலமைச் செறிவும், பண்பு மேம்பாடும் இதனால் அறியப்படும். 'பசிப்பிணி மருத்துவன்’ என, அவனுக்கு உயரிய புகழ்ப் பெயரையும் சூட்டுகின்றான் இம் மன்னன்.
சோழன் நலங்கிள்ளி 73, 75
பகைவரை அழித்து வெற்றி கொள்வதாக வஞ்சினம் கூறுகின்றான் இவன் (73). இதனால் இவனது மறமேம்பாடு காணப்படும். ஆள்வோரது கடமைகளை விளக்கும் பொருள் செறிந்த செய்யுள் இவனது பிற செய்யுளாகும் (75). உயர்ந்தோர் நாட்டாட்சி பெறின் அச் செல்வம் எவ்வாறு மக்களுக்குப் பயன்படும் என்பதனையும், சிறியோன் பெறின் எவ்வாறு சீர்கேடு அடையும் என்பதனையும் சிறப்புற விளக்குகின்றான் இவன்.
சோழன் நல்லுருத்திரன் 190
கலித்தொகையின் முல்லைக் கலியைப் பாடியவன் இவன் என்பர் சிலர். அதனைப் பாடியோரை நல்லுருத்திரனார் எனும் புலவர் எனக் கொள்வர் பலர் முயற்சி உடையாரது செயல் மேம்பாட்டை விளக்குகின்றது இச் செய்யுள் உருத்திரன்’ எனும் பெயர், இவனது சிவனெறிச் சார்பைக் காட்டுவதும் ஆகலாம்.