பக்கம்:பூமியின் புன்னகை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

31

இன்றெனக்குக் கைபோமோ கால்போமோ
எனப்பயந்து ஒருகையால் சட்டைப்பைச்
சில்லறையைத் துழாவித் தேடுகையில்
சில்லறையோ காசுகளோ சிறிதுமில்லை
மெல்ல மணிபர்ஸை வாய்திறந்து
மேலாக மீதியுள்ள ஒரு நோட்டைச்
சில்லிட்டு வேர்வைக் குளமாடிச்
செலவழியா தின்னும் மீதமிருக்கின்ற
பொல்லாத மாதக் கடைசியிலே
பொக்கிஷமாய்க் கையிருக்கும் சேமிப்பைக்
கொல்லும் ஒரு கொலைகாரன் போற்பிடித்து
மேற்கொணர்த்து கண்டக்டர் வசம் நீட்டி
'கெல்லிஸ் ஒருடிக்கெட்' எனக்கேட்கக்
கோபமுடன் மேல்கீழாய் எனைப்பார்த்து
சில்லறையாய்த் தாவென்று சீறிவிட்டுச்
செவிகைப்ப விசிற்கொடுத்து நிறுத்தியபின்
மெல்ல இறங்கப்பா எனக்கூறி
மேலோன்போல் வழிவிட்டு நின்றுகொண்டான்.
என்னென்னவோ செய்யக் கொதிக்கின்ற
எரிநெஞ்சத் துயரமொடு ஏறெடுத்துப்
பின்னுகின்ற பார்வையினால் பார்க்குங்கால்
பெரிதாய்ச் சிரிக்கின்ற வள்ளுவரும்
'இன்னா செய்தாரை ஒறுத்தல்
இங்கு அவர்நாண நன்னயஞ் செய்துவிடல்'
என்னுமொரு திருக்குறளும் கண்ணெதிரே
இசைவாகத் தெரிகிறது புரிகிறது.

[செப் - 1970)