பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பூர்ணசந்திரோதயம் - 5 நான் நேற்றுமுதல் பட்ட பாடினால் இப்போது என்னுடைய உடம்பின்ஸ்திதி நிரம்பவும் கேவலமாக இருக்கிறது. எப்போது இந்த உடம்பைக் கீழே போடுவோமென்று இருக்கிறது. அதுவுமன்றி, இன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலியோர் வெண்ணாற்றங்கரைக்குப் போய் அங்கே புதைக்கப்பட்டிருந்த ஜெமீந்தாருடைய பிரேதத்தை எடுத்துப் பரிசோதனை செய்துவிட்டு, அதை இப்போதுதான் நீலமேகம் பிள்ளையின் ஜாகைக்குக் கொண்டு போகிறார்கள். நான் குற்றவாளியல்லவென்று அவர்கள் தீர்மானித்து என்னை அனுப்பி விட்டார்கள். இப்போதுதான் நான் அங்கே யிருந்து வந்து படுத்துக் கொள்ளப் போனேன். அந்த ஜெமீந்தாருடைய பிரேதத்தைப் பார்த்ததனால் என்னுடைய மனசு பைத்தியங் கொண்டதுபோல இருக்கிறது. என்னுடைய உடம்பு சோர்ந்து தள்ளாடுகிறது. உயிர் தத்தளிக்கிறது. நான் உடனே படுத்துப் பொழுது விடியும் வரையில் தூங்கி எழுந்தால்தான், என் உயிர் உடம்பில் நிலைக்கும் போலிருக்கிறது; அதுவுமன்றி, நான் ஆடையில்லாமல் இருக்கும் இந்த அசந்தர்ப்ப வேளையில், அன்னிய புருஷராகிய நீர் வந்ததால், என் உடம்பில் ஒருவித நடுக்கமும் உதறலும் உண்டாகிவிட்டன. மனசிலும் பெருத்த திகில் பிடித்துக்கொண்டது. அதனாலும், எனக்கு நாவறண்டு போய், ஒருவித மயக்கமும் கிருகிருப்பும் உண்டாவதாலும், தயை செய்து நீர் என்னைவிட்டு வெளியில் போவீரானால் உமக்குநிரம்பவும் புண்ணியமுண்டு. உம்மை நான் என்னுடைய சொந்தத் தமையனாகப் பாவிக்கிறேன். ஆகையால், நான் உம்முடைய காலில் விழுந்துகூடக் கும்பிடத் தடையில்லை. என்னை மேலும் வதைக்காமல் போவீரானால், நீர் நன்றாக இருப்பீர் உம்முடைய பெண்டு பிள்ளைகளெல்லாம் அமோகமாக வாழும்’ என்று முற்றிலும் உருக்கமாகக் கூறி நிரம்பவும் பணிவாகக் கேட்டுக்கொண்டாள். அவள் எடுத்துக்கூறிய நியாயங்கள் முரட்டு மனிதனான கட்டாரித் தேவனது மனதில் சிறிதும் பட்டதாகத் தோன்றவில்லை.