பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வெள்ளையர்களை நோக்கி—வெறும் தர்ப்பைதான் இருக்கிறது வேதியர்களிடம்—எனினும், காலைக் கழுவுகிறார், அப்போது தான் கடவுளின் அருளுக்கு தான் பாத்திரமாக முடியும் என்ற நம்பிக்கையோடு! டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார் புத்தமார்க்கத்தின் பொலிவு மீண்டும் தெரிகிறது என்று. தெரிகிறதா, நண்பர்களே.தெரிகிறதா? கண்ணும் கருத்தும் பழுதாகாத காங்கிரஸ் நண்பர்களே! தெரிகிறதா நாட்டின் நிலைமை? எந்தெந்த நாட்டுக்காரன், இதனைப் படம் எடுத்தானோ—எந்தெந்த நாட்டிலே மக்கள் இதைக் காண்கிறார்களோ—என்னென்ன பேசிக்கொள்கிறார்களோ—இங்கே, டாக்டர் பேசுகிறார், அசோக சக்கரத்தைப் பாரீர் என்று! அசோக சக்கரம், சின்னம்! ஆரியருக்கு அடிவருடுவதுகூட அல்ல, காலைக் கழுவி, கதிமோட்சம் கோருபவர்; அந்த சர்க்காரின் முதல் அதிகாரி! பாபு ராஜேந்திரர், தங்கள் காலைக் கழுவியபோது, அந்த இருநூறு பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டத்திலே உள்ள பார்ப்பனர் அவ்வளவு பேரும், மார்பை முன்னாலே நிமிர்த்தி அல்லவா நடந்திருப்பர்! ஆரிய தர்மம் மீண்டும் அழகுறப் பிரகாசிக்கிறது—புரேகித மார்க்கப் பொலிவு மிகவும் நன்றாகத் திகழ்கிறது, என்று அவர்கள் கூறினால், வேதனை ஏற்படும் பகுத்தறிவாளர்களுக்கு. ஆனால் மறுத்துக் கூறமுடியாதே! இந்தநிலையிலே நாடு இருக்கும் போது டாக்டர் ராதா கிருஷ்ணன், புத்த மார்க்கப் பொலிவு தெரிகிறது என்று புனித விழாவிலே பேசுகிறார்!!

கருத்துப் புரட்சி ஏற்படாத நாட்களிலே, நாடும் காடும், வீடும் தோட்டமும்போல நெருங்கி இருந்த நாட்களிலே, வீரனும் தீரனும், வாளும் வேலும் தவிர வேறு ஆயுதங்கள் பெற்றிராத நாட்களில், மாத்தடியிலே பள்ளிக்-