பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


புத்த மார்க்கம்; பழைய மார்க்கத்தினர், வலியுறுத்திக் கட்டிக் காத்துவந்த ஜாதிமுறையினால், சமுதாயம் சின்னா பின்னப்படும் என்பதை எடுத்துக்காட்டி, மனித குலம் ஒன்றுதான், என்ற உண்மையை உரைத்தது.

புத்த மார்க்கம் வேள்வியை மறுத்தது—வேள்வி செய்வதற்கென ‘பட்டயம்’ பெற்றிருந்த ‘ஜாதி’ முறையைக் கண்டித்தது.

மருட்டும் குருமார்கள், குருட்டுத்தனம் மிகுந்த சீடக் கூட்டம்—என்ற நிலைமை, நாதனை அறியும் நல்வழி அல்ல, என்று நாட்டுக்கும் உலகுக்கும் புத்த மார்க்கம் உணர்த்து வித்தது.

இந்தப் புது முறையை, புதிய பொலிவை, இப்போது காண்கிறோமா? காணவேண்டும் என்ற கருத்துக் கொண்டோர் எவ்வளவு தொகையினர் உளர்! அனைவரும் அறிவர், புத்த மார்க்கத்தின்மூலம் புகுத்தப்பட்ட ‘பொன்னொளி’யை, மீண்டும் பழைய முறை எனும் ‘அந்தகாரம்’ கப்பிக்கொண்டது என்பதை. எனினும் டாக்டர் பேசுகிறார், எங்கள் சின்னம் அசோகசக்கரம்! என்று,நெஞ்சறிந்து பொய் என்பதுமட்டுமல்ல, வெந்த புண்ணிலே வேலல்லவா அந்தச் சொல்!!

தாளச் சத்தமும் மேளச் சத்தமும், தந்தினம் பாடுவதும், வெந்ததைப் பிரசாதம் என உண்பதும், வேடமணிவதும், வேற்றுமை வளர்ப்பதும், யாத்திரை என்பதும், கோத்திரம் பார்ப்பதும், மனிதர் உய்யும் மார்க்கமாகாது; மனதைத் தூய்மைப்படுத்தி, ஆசாபாசங்களை விட்டொழித்தால் மட்டுமே மனித குலம் உய்வுபெறும்—என்று புதிய போதனை செய்தார் புத்தர்!