பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


எந்தச் சத்தமும் குறையவில்லை—வலுக்கிறது—எந்த வேடமும் களையப்படவில்லை—புதுப் புது வேடதாரிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்—வீண் ஆரவார விழாக்களும், விலாப்புடைக்கத் தின்பதும், வீணாட்டம் நடத்துவதும் ஓயக் காணோம், புத்தமார்க்கப் பொலிவு மீண்டும் காணப்படுகிறது என்கிறார் வேதாந்தி; சந்தேகம் கொள்வோர், அசோகச் சக்கரத்தைக் காணீர் என்று ஆதாரம் காட்டுகிறார்; எவ்வளவு நெஞ்சழுத்தம்! நெஞ்சழுத்தம்மட் டுமா? எவ்வளவு நம்பிக்கை, இந்த மக்களிடம் எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், என்பதில்!

புத்தமார்க்கப் பொலிவு மீண்டும் இங்கே தெரிகிறதாம்.

தெரிகிறதா என்று பாருங்கள், நாட்டிலே இன்று தெரியும் காட்சிகளிலே ஏதேனும் ஒன்றை, மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.

சிறுமதியாளர்கள் செய்யும் சில்லரைச் சேட்டைகளை விட்டுத் தள்ளுங்கள். காவடி தூக்கிடும் கருத்தற்றவன், வீதியில் புரளும் வீணன், எச்சிலிலை உண்ணும் ஏதுமறியாதான், மரத்தைச் சுற்றிவரும் ‘மகராஜிகள்’ இவர்களைக்கூடப் பார்க்கவேண்டாம்—பாமரர்!

படித்தும்,பஞ்சாங்கம் பார்க்கும் பயங்கொள்ளி, பட்டாளத்திலே சேர்ந்த பிறகு சகுனம் பார்க்கும் பழைமை விரும்பி, இவர்களையும் பார்க்கவேண்டாம்—பரிதாபத்துக்குரியவர்கள்.

குடியாட்சியின் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் இருக்கிறாரே, பீகாரில் தேசீயப் புயலை உண்டாக்கிய வீரர், அவரைப் பாருங்கள்!