152 - பொன் விலங்கு
அவளுடைய இதழ்கள் தன்னோடு பேசிவிடத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்க்காதது போலவே முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். கருநாகமாய் நீண்டு பின்னிக் கொண்டு தொங்கும் சடைக்குஞ்சலங்கள் ஆட, ஒசைப்படும் வளைகளும், ஓசைப்படாமல் மணக்கும் பூக்களின் மணமுமாக அவள் தன் பின்னால் தனக்கு மிக அருகே நடந்து வந்து கொண்டிருப்பது புரிந்தும் புரியாததுபோல் முன்னால் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. சந்நிதி முகப்பில் பித்தளைக் கிராதியின் இருபுறமும் நின்று எதிரெதிரே ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தபோதும் ஒன்றும் பேசாமல் மெல்லப் புன்னகை மட்டும் செய்தான் அவன். கவனித்ததில் அப்போது அவளுடைய உதடுகள் தன்னோடு பேசத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. உடன்வந்திருந்த சிறுவன் அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவள் கேள்விகளுக்குச் சுவாரசிய மில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அர்ச்சனை முடிந்து அவன் புறப்படுவதற்குள் அம்மன் சந்நிதியின் இரண்டு பிரகாரங்களையும் சுற்றிக் கொண்டு சுவாமி சந்நிதிக்குப் போய்விட நினைத்தான்.அவன். ஆனால் அவன் நினைத்தபடிநடைபெறவில்லை. அவளை முந்திக்கொண்டு போய்விட நினைத்த அவன் நினைப்பு வீணாயிற்று. அம்மன் சந்நிதியின் இரண்டாவது திருச்சுற்றில் கொலுமண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே அவனைப் பின் தொடர்ந்தாற்போல அவள் மிக அருகே வந்து சேர்ந்தாள்.
'இவ்வளவு நாழிகைக்கு அப்புறம் கோவிலுக்கு வந்திருக் கிறீர்களே?" வேறு எதையோ பேச நினைத்து அதைப் பேசுவதற்குச் சொற்களும், துணிவும் கிடைக்காத பதற்றத்தினால் அன்பின் மிகுதியால் பிறந்த ஒருவிதமான பயத்தோடு அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள் அவள்."இதே கேள்வியை உங்களிடம் திருப்பிக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?' என்று சத்தியமூர்த்தி அவளைத் திரும்பிப் பார்த்து வினாவியபோது அவள் சிரித்தாள். முகமும் இதழ்களும் கனிந்து சிவந்தன. இந்த நாணத்தின் சுவடு முகத்திலிருந்து மறைவதற்கு முன்பாகவே, அவள் தன்னை