பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 249

‘உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தலே நல்லமைதி!

‘ஒரேயடியாக எல்லோரும் வானத்துச் சூரியனை அடைந்துவிட முடியாது. சிறிது சிறிதாக உயரே பறந்து, பயிற்சி பெற்று, உறுதியுடன் முயன்று வந்தால், நினைத்த இலட்சியம் நிச்சயம் கைகூடும்!

‘நவரத்தினங்களைவிடச் சிறந்தது நான் கூறும் நல்லறம்; தேனினும் இனியது இந்தத் தருமம்; இன்பங்களில் எல்லாம் இதுவே தலைசிறந்தது!

‘எதற்கும் முதலில் ஒழுக்கம் வேண்டும்.

‘எந்தப் பிராணியையும் கொல்லாதீர்கள்!

‘தானம் கொடுங்கள்; பிறர் உதவிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், பேராசை, புரட்டு, பலவந்தம் ஆகிய வழிகளில் பிறர் பொருளில் ஆசை வைக்கவேண்டாம்!

‘பொய்ச் சாட்சி சொல்லவேண்டாம்; அவ தூறு கூறவேண்டாம்; சுத்தமான அகத்திலிருந்து வரும் பேச்சே! சத்தியமானது!

‘மயக்கமளிக்கும் குடிவகைகளை ஒழித்து விடுங்கள்!

‘பிறன் மனைவியைத் தீண்டலாகாது. உடலால் இயற்றும் மற்றைத் தீமைகளையும் கை விட்டு விடுங்கள்!’

போ–16