பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 ⚫ போதி மாதவன்

கொண்டு, என் ஒரே குறிக்கோளை அடைவதிலேயே நான் ஈடுபட்டிருக்கிறேன்.

சித்தார்த்தர் : சஞ்சலம் மிகுந்த இவ்வுலகில் சாந்தி பெற முடியுமா? இன்பங்களின் வெறுமையை நான் கண்டு கொண்டேன்; அதனால் காமத்தை வெறுத்துவிட்டேன். எல்லாம் எனக்கு வேதனையாகவே உள்ளன, வாழ்க்கை கூட எனக்குத் தாங்க முடியாத துயரமாகிவிட்டது.

துறவி : சூடுள்ள இடத்தில் குளிர்ச்சியும் இருக்கும். உயிர்கள் வேதனைக்கு உட்பட்டிருக்கின்றன என்றால், அவை இன்பம் நுகரவும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ் விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இவ்வாறு, எங்கே துன்பம் பெருகியுள்ளதோ, அங்கேயே அளவற்ற இன்பமும் விளையக் கூடும் ஆனால் கண்ணைத் திறந்து பார்த்து நாம் அதைக் கண்டு கொள்ள வேண்டும். குப்பைக்குள்ளே விழுந்தவன் அருகேயுள்ள தாமரைத் தடாகத்தைத் தேடவேண்டும்; அதுபோல், பாவத்தைக் கழுவி நீக்குவதற்கு நித்திய ஆனந்தமாகிய நிருவாண நீர் நிலையைத் தேடுவாயாக!

சித்தார்த்தர் : இந்த நேரத்தில் தாங்கள் கூறியது எனக்கு நற்செய்தியாகும்; இனி என் காரியம் கைகூடும். நான் வாழ்க்கையில் ஈடுபட்டு எனக்கும் என் குடும்பத் திற்கும் பெருமையளிக்கும் முறையில் உலக சம்பந்தமான கடமைகளை நிறைவேற்றி வரவேண்டும் என்று என் தந்தையர் எனக்கு அறிவுறுத்தி வருகிறார். நான் மிக்க இளமையாயிருப்பதாயும், எனது நாடித் துடிப்புக்குத் துறவு வாழ்க்கை ஒவ்வாது என்றும் அவர் கூறுகிறார்.

துறவி: உண்மையான ஆன்மிக வாழ்வுக்கு ஒவ்வாத காலம் எதுவுமே யில்லை என்பதை நீ உணர்ந்திருக்க வேண்டும்!