பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

அறத்தின் குரல்


“மகாப்பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. வலிமையான எங்கள் பகைவர்களை அழிப்பதற்குச் சில விசேஷ அஸ்திரங்கள் வேண்டும். அவற்றைப் பெற்றுக் கொண்டு போவதற்கே வந்தோம்” என்று கூறினர் அர்ச்சுனனும் கண்ணனும். உடனே சிவபெருமான் அங்கிருந்த ஒரு பொய்கையை அர்ச்சுனனுக்குச் சுட்டிக் காட்டி அதில் நீராடுமாறு கூறினார். அர்ச்சுனன் அவர் கட்டளைப்படியே அந்தப் பொய்கையில் இறங்கி மூழ்கி எழுந்தான். அவன் மூழ்கி எழுந்த அளவில் அவனோடு ஒரு பெரிய பாம்பும் எழுந்தது. பிரம்மாண்டமான அந்தப் பாம்பின் அங்காந்த வாயிலிருந்து ஒரு முனிவர் தோன்றி வெளி வந்தார். அந்த முனிவர் பொய்கைக்குள் மூழ்கி ஒரு வில்லையும் சில அஸ்திரங்களையும் நீருக்குள்ளிருந்து எடுத்துக் கொண்டு வந்து அர்ச்சுனனிடம் கொடுத்தார். பின்பு அந்த முனிவரே அஸ்திரங்களைப் பிரயோகிக்கும் விதத்தையும் வேறு சில போர்த்திரங்களையும் அர்ச்சுனனுக்குக் கற்றுக் கொடுத்தார். அஸ்திரப் பிரயோகத்திற்குரிய மந்திர தந்திர இரகசியங்களையும் அவரிடமே தெரிந்து கொண்டான் அர்ச்சுனன். இறுதியில் கண்ணனும் அர்ச்சுனனும் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கயிலையை விட்டுக் கிளம்பினார்கள். புறப்படும் போது சிவபெருமான் கண்ணனைப் பார்த்து, “நீ பூவுலகில் மக்கட் சுமையைக் குறைத்துப் பூமிதேவிக்கு ஓய்வளிக்கச் சென்றிருக்கிறாய். அந்தச் செயலில் பூரண வெற்றி பெற்றுத் திரும்பி வா...” என்று கூறினார்.

திருக்கயிலையை நோக்கிச் சென்றவர்களின் நிலை இவ்வாறிருக்க, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனிப்போம். தருமர், அர்ச்சுனன் கயிலைக்குச் சென்றிருக்கும் செய்தியைத் துரியோதனனுக்கும் தெரிவித்து விடுவதுதான் போர் அறம் என்று எண்ணினான். அதனால் உடனே விமன் மகனான கடோற்கசனை அழைத்துச் சத்திரதனைக் கொல்வதாக அர்ச்சுனன் சபதம்