புதல்வர் தம்
நல்வழி போன்ற நல்ல நீதி நூல்களைப் பாடியவர். அவர் பாடல்களை நீ ஆரம்பப்பள்ளியில் படித்திருக்கிறாய். இங்கே நான் கூறிய ஒளவை அவரினும் வேறு பட்டவர். அவர் வாழ்ந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டு வாழ்ந்தவர்; சங்ககாலத்தவர். அவர் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவர் அரசரோடு கலந்து அவர்களுக்கு இடையில் இருந்த பிணக்கையெல்லாம் நீக்கியவர். தனக்கென வைத்திருந்த நெல்லிக்கனியை அதிகமான் என்னும் மன்னன் இந்த ஒளவைக்கு ஈந்து அவரை நெடுங்காலம் வாழவைத்தான். அப்புலவர் பாடிய புறப்பாடல்களுள் இரண்டொன்றை நீ மேல் வகுப்பில் படித்திருக்கலாம். அவரே இக்குழந்தை வாய்ச் சொல்லை அழகாகப் பாராட்டுகின்றார். அப்படிப் பாராட்ட அவருக்கு அவசியம் எப்படி ஏற்பட்டது எனக் கேட்கிறாயா? அவர் பாட்டே அதற்குப் பதில் சொல்லுகிறது.
அதிகமான் அஞ்சியை விளித்து ஔவையார் அப் பாடலைப் பாடுகிறார். அதிகமானுடைய அருளை வேட்டு விரும்பும் பாடல் அது. தன் பாடலைக் குழந்தையின் பொருள் அறியா வாய்ச்சொல்லுக்கு உவமைப்படுத்துகின்றார். படுத்தி, குழந்தை வாய்ச்சொல்லைக் கேட்ட அன்னையும் அத்தனும் அக்குழத்தையிடம் அன்பொடு அருளையும் பெய்து பெருமகிழ் வெய்துதல்போல, அதிகமானும் தனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்ளுகின்றார். குழந்தை இன்பத்தையும் அதன் சொல்லின்பத்தையும் அதிகமான் முன்னமே உற்று அறிந்தவனாகத்தான் இருந்திருக்கவேண்டும். எனவேதான் இப்பாடலைக் கேட்டு ஔவைக்கு அருள் செய்து தான் உண்ணவைத்திருந்த நெல்லிக்கனியையும் ஈந்தான். இதோ அந்த ஒளவையின் பாட்டைத் தந்து விடுகிறேன்.