264
மணிபல்லவம்
போது, மனித நம்பிக்கைகள் குன்றியவனாக இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கூப்பினான், இளங்குமரன். “பூம்புகாரைக் காக்கும் தெய்வமே! சம்பாபதித் தாயே! என்னையும் இந்த அபலைப் பெண்ணையும் காப்பாற்று நான் இன்னும் நெடுங்காலம் வாழ ஆசைப்படுகிறேன். என்னை அழித்து விடாதே, என் ஆசைகளை அழித்து விடாதே” என்று மனமுருக வேண்டிக் கொள்வதைத் தவிர, வேறு முயற்சி ஒன்றும் அப்போது அவனுக்குத் தென்படவில்லை.
ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல், மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போது தெரியவில்லை. தன்னையும், தன்னால் காப்பாற்றப்பட்டவளையும், இருவருடைய உயிர்களையும் பற்றியே நம்பிக்கையையும், அதன் விளைவுகளையும் தெய்வத்தினிடம் ஒப்படைத்து விட்டுப் படகினுள் சோர்ந்து ஒடுங்கிப் போய் வீற்றிருந்தான் இளங்குமரன். காலையா, நண்பகலா, மாலையா என்று பொழுதைப் பற்றியே தெரிந்து கொள்ள இயலாதபடி மழை மூட்டடத்தில் சூழ்ந்து பொய்யிருள் ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொழுதும் அந்தப் பொய்யிருளில் மறைந்திருந்தது.
இளங்குமரன் இருந்த படகு சங்கமுகத்தைக் கடந்து பல நாழிகைத் தொலைவு கடலுக்குள் அலைந்து திரிந்தாகி விட்டது. காவிரியின் சங்கமுகத்துக்குக் கிழக்கே தொலைவில் நடுக் கடலுள் ‘கப்பல் கரப்பு’ என்ற ஒரு திடல் இருந்தது. மண் திடலாகச் சிறிய மலை போன்று உயர்ந்து தோன்றும் மேட்டு நிலத்தீவு அது. தென்னை மரங்கள்