பக்கம்:மணி பல்லவம் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

305

பக்கத்திலிருந்த அவள் தந்தையாரின் பண்டசாலையில் அமரச் செய்துவிட்டு மாளிகைக்கு விரைந்தார்கள் அந்த ஊழியர்கள்.

அப்போது, ‘என்னை அழைத்துச் செல்வதற்காக எனது மாளிகையிலிருந்து வரப்போகும் தேரிலேயே இளங்குமரனையும் ஏற்றிக் கொண்டு போய் அவர் தங்கியிருக்கும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் விட்டுச் சென்றால் என்ன?’ என்று நினைத்தாள் சுரமஞ்சரி. உடனே எழுந்திருந்து போய் ‘அவர் நிற்கிறாரா?’ என்று துறைமுகவாயிலிலும் பார்த்தாள். அங்கே அவரைக் காணவில்லை. ‘அவர் நடந்து புறப்பட்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டு சுரமஞ்சரி ஏமாற்றத்தோடு திரும்பிப் பண்டசாலைக்குள் மீண்டும் வந்து அமர்ந்தாள். அவள் கண்கள் எங்கும் இளங்குமரனைத் தேடின. பண்டசாலை யில் வந்து அமர்ந்தபின்பும் எதிர்ப்புறம் தெரியும் துறைமுக வீதியையே கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.

‘பெண்ணே! என்னுடைய கருணையை நீ அடைய முடியும். ஆனால் அன்பை அடைய முடியாது’ என்று அவன் திரும்பித் திரும்பி இரண்டு மூன்று முறை தன்னிடம் வற்புறுத்திக் கூறிய அந்தச் சொற்கள் இன்னும் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தன. கப்பலிலிருந்து இறங்கியதும் அவள்தான் அவனிடம் கோபித்துக் கொண்டு விலகி வந்தாளே தவிர, அவள் மனம் அவனிடமிருந்து விலகி வரவில்லை. அவள் மனத்தின் நினைவுகளும் கனவுகளும் அவனைப் பற்றியே இருந்தன. அவள் சிந்தனைகளுக்கு இளங்குமரனே இடமாகவும், எல்லையாகவும் இருந்தான். பண்டசாலையின் முன்புறம் இரண்டு அலங்காரத் தேர்கள் வந்து நின்ற ஒலியில் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி.

ஒரு தேரிலிருந்து நகைவேழம்பரும் அவள் தந்தையாரும் இறங்கினார்கள். மற்றொரு தேரிலிருந்து அவளுடைய தாயார், சகோதரி வானவல்லி, வசந்தமாலை ஆகியோர் இறங்கினார்கள்.

ம-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/11&oldid=1149165" இலிருந்து மீள்விக்கப்பட்டது