பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் படைப்புகளில் சிகரம் போன்றவன் மனிதன். மனிதனின் படைப்புகளில் சிகரம் மொழி, மொழியின் சிகரம் கவிதை. அது மொழியின் பூரணப் பொலிவும்கூட தமிழ் இலக்கியம் நீண்ட மரபுடையது. மரபு வழுவாமல், புதுமைகளைப் புகுத்தி, தற்காலத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மகாகவி பாரதியார் - பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்துக்கே உண்டு. இக் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதலாவது இடத்தைப் பெற்றவர் கவிஞர் முடியரசன். "எனது மூத்த வழித்தோன்றல் முடியரசனே' என்று பாவேந்தராலேயே பாராட்டப் பெற்ற பெருமையுடையவர். ஆழ்ந்த புலமைமிக்க இக் கவிஞர் அழகும் இனிமையும் புதுமையும் கொஞ்சிக் குலவும் ஏராளமான கவிதைகளை எளிய நடையில் இயற்றித் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர்.

பொதுவாக கவிஞர்களின் உள்ளம் தனித்தன்மை வாய்ந்தது. பார்வையும் தனி - கோணமும் தனி - உணர்வும் தனி - எல்லாமே தனி. அதனாலேயே, தனித்து நின்று இலக்கிய உலகுக்கு தனி முத்திரை பதிந்த" கவிதைகளைக் கவிஞனால் வழங்க முடிகிறது. இலக்கியவாதிகளில் பத்தோடு பதினொன்றாகக் கவிஞனைக் கருத முடியாது. இலக்கிய உலகில் சிங்கம் போல உலவக் கூடியவர்கள் உண்மையான கவிஞர்கள். அந்த அபூர்வ இனத்தைச் சேர்ந்த கவிஞர் முடியரசன் எந்தச் சபலத்துக்கும் முடி சாய்க்காத ஆண்மையாளர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை மனிதரிடையே பேதாபேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை- குருட்டுப் பழக்க வழக்கங்களைச்சாடியவர். மனித நேயத்துக்கும்

சமத்துவத்துக்கும் எதிரான கருத்துக்களை எதிர்த்து,