முடியரசன் எனும்பெயரைப் பூண்டி ருந்தும்
முடியிழந்து நிற்கின்றேன்; நீயும் இன்று முடியிழந்து நிற்கின்றாய்; ஆனால் என்போல்
முடிஒன்றும் நரைக்கவில்லை; யாண்டுப் பெற்றாய்? இடியனைய துயர்வந்து தாக்கும் போதும்
இடியாமல் சிரிப்பதனால் பெற்றாய் போலும்! முடியிழந்து நின்றாலும் மன்னா நின்றன்
முகத்தழகு சிரித்துவிளை யாடக் கண்டேன்.
பேரன்எனக் கொருவன்தான் எனினும் இன்று
பேணாத முதுமைவரத் தளர்ந்து நின்றேன்; பேரன்மார் பலரிருந்தும் தாத்தா என்று
பேர்சொல்லி அழைத்திருந்தும் இளைஞ னைப்போல் மாரனைப்போல் எழில்தவழச் சிரிக்கின் றாய்நீ;
மாமருந்து யாதுண்டாய்? உண்மை சொல்வாய்; ஊரறியச் சொலல்வேண்டா எனக்கு மட்டும்
ஒருசெவியில் சொல்லிவிடு வேண்டு கின்றேன்.
'சிரிப்பென்னும் மருந்துண்டேன் அம்மருந்தைச்
சித்தர்திரு வள்ளுவனார் தந்தாரென்று உரைக்கின்றாய் நெஞ்சுக்குள் என்செ விக்குள்
ஒருசிறிது விழக்கேட்டேன்; குறள் நூல் சொல்லி விரிக்கின்ற பொருளனைத்தும் விரித்துச் சொல்லி
விளக்கிவரும் புலவன்நான்; எனினும் இன்னும் வருத்திவரும் கலைக்கு மருந்து கண்டு
வாழ்வதற்குக் கற்கவில்லை; கலைஞன் நீதான்.