உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 101

எழுந்தது குறுவியர் இழிந்தது சாந்தம் ஓடின தடங்கண் கூடின புருவம்

அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும் இடையிடை யிருகால் தெரிதர மடித்தும்

அரவணி யல்குல் துகில்நெறி திருத்தியும் நித்திலக் குறுவியர் பத்தியில் துடைத்தும் பற்றிய கந்துகம் சுற்றுமுறை யுரைத்தும் தொடையுங் கண்ணியும் முறைமுறை யியற்றியும் அடிமுதல் முடிவரை யிழைபல திருத்தியும் படிந்தவண் டெழுப்பியும் கிடந்தபந் தெண்ணியும் தேமலர்த் தொடையில் திறத்திறம் பிணைத்தும் பந்துவர நோக்கியும் பாணிவர நொடித்தும் சிம்புளித் தடித்தும் கம்பிதம் பாடியும்

பந்தடித்தாள் என்று அவர் கூறுகிறார்.

மானனீகை பந்தடித்து, மற்றவளைவிட ஆயிரங்கை அதிகமாகக் கணக்கேற்றினாள். அதாவது, நாலாயிரங்கை கணக்கெடுத்தாள். அப்போது அங்குக் கூடியிருந்த பெண்மணிகள் கைகொட்டி ஆரவாரஞ் செய்து மகிழ்ந்து அவளைக் கொண்டாடினார்கள்.

பெண்மணிகள் விளையாடிய பண்டைக் காலத்துப் பந்தாட்டம் இக்காலத்தில் மறைந்துவிட்டது. இக்காலத்து மகளிர் புது வகையான பந்தாட்டம் ஆடுகிறார்கள். இதுபோன்று பல பழைய விளையாட்டுகள் மறைந்து போய்ப் புது விளையாட்டுகள் தோன்றியுள்ளன. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்னும் நன்னூல் இலக்கணச் சூத்திரம், இலக்கணத்துக்கு மட்டுமன்று; விளையாட்டுக்கள் முதலியவற்றுக்கும் பொருந்துவதாகும்.