மறைந்துபோன தமிழ் நூல்கள்
23. நந்திகோவை
45
இந்தக் கோவை, தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப் பட்டதென்று நந்தி கலம்பகச் செய்யுளினால் தெரிகிறது.
இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே அல்லவோ-நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி அடங்காப்பூ பாலரா னார்
என்பது அச்செய்யுள். இதனால், புலவர்கள் பலர் நந்திவர்மன் மேல் பல கோவைப் பிரபந்தங்கள் பாடிப் பரிசு பெற்றனர் என்பது தெரிகிறது. அந்தக் கோவைகளில் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை.
24. நறையூரந்தாதி
இதுவும் அகப்பொருள் துறையமையப் பாடப்பட்ட அந்தாதி நூல். இதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற்காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது:
நல்லளந் தானு மமுதளந் தானு நகைக்குநல்ல வில்லளந் தானுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின் சொல்லளந் தானொரு பாவலர்க் காய்த்துறை யூர்நறையூர் நெல்லளந் தானளந் தானெடு நாட்டிற்கு நேர்நிற்குமே.
துறையூரைச் சேர்ந்த நறையூரில் இருந்த ஒருவர்மீது இவ்வந்தாதி பாடப்பட்டதென்பது தெரிகிறது.
25. நாலாயிரக் கோவை
இந்நூல், புதுவைக் காங்கயன் என்னும் செல்வச் சீமான்மீது கடவுட் புலவன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ஒட்டக் கூத்தரால் பாடப்பட்டது. இதனைச் சோழமண்டல சதகத்தினால் அறியலாம். அச்செய்யுள்:
கோலா கலமன் னரிலவன்போற்
கொடுத்தே புகழுங் கொண்டாரார்
மேலார் கடவுட் புலவனெனும்
விழுப்பேர் கூத்தன் முழுப்பேரா