மருதநில மங்கை123
பொருந்துமாறு செறிக்கப் பெற்ற மோதிரத்தைக் கண்டாள். சுறாமீன் உருவம் பொறித்த அம்மோதிரத்தைக் கண்ட அவள், “சுறா காமன் கொடி. அதைப் பொறித்த மோதிரத்தை இவன் கையில் அணிவித்துவிட்ட அப்பரத்தை, ‘இவன் தந்தையை, உன் கணவனை, நான் என் வயமாக்கிக் கொள்வேன். அவன் மார்பில் காமன் கொடியைப் பொறித்து, அவனை என் அடிமையாக்கிக் கொள்வேன்!’ என்று கூறி, எனக்குவிட்ட எச்சரிக்கையன்றோ இது! நான் கண்டு கலங்க வேண்டியவற்றுள் இதுவும் ஒன்று போலும்!” எனக் கூறிக் கண்ணீர் சொரிந்தாள்.
சுறா பொறித்த சிறுவிரல் மோதிரம் கண்டு சினந்தவள், மகன் கையில் புதிய தொடி ஒன்றிருக்கக் கண்டாள். அதைப் பற்றி நோக்கினாள். அது அவள் கணவனுக்குரியது. கணவன் கையில் இருந்த காலத்தில், தான் கண்டு மகிழ்ந்த தொடி, இன்று, அதை அவன் தான் விரும்பும் பரத்தைக்கு அளிக்க, அவள் அதைத் தன் மகன் கையில் அணிவித்து அனுப்பியுள்ளாள் என்பதை அறிய, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற் போலாயிற்று அவள் நிலை. “நான் கண்டு வருந்த எனக்கு நேர்ந்த இழிநிலைகளுள் இதுவும் ஒன்று,” என நினைத்து வருந்தினாள். தன் காதலன் தன்னை விரும்பித் தனக்கு அளித்த இத்தொடியை, அப்பரத்தை இவன் கையில் சூட்டி அனுப்புவானேன்? அனுப்பிய அவள் கருத்து யாதாம்? என்று சிந்தித்து நின்றாள். “தன்னினும் நான் குறையுடையேன். தன் கணவனைக் காதலிக்கும் தகுதி எனக்கு இல்லை என, என்னை இழித்துப் பேசி இறுமாந்து