மருதநில மங்கை163
பணிந்த அவன் நிலை கண்ட அவள் நெஞ்சம், அவன்பால் பரிவு கொண்டது. அவனை வெறுத்து வாழ்தல், அவள் பெண்மையின் மென்மைக்கு இயலாது போயிற்று. அதனால், “ஏடா! உறுதிப்பாடற்ற உள்ளம் என் உள்ளம். அவ்வுள்ளத்தை உறுதுணையாகக் கொண்ட என்னால், நீ செய்யும் இழிசெயல்களால் ஆகும் துன்பச் சுமையைத் தாங்கிக் கொள்ள இயலாது. ஆகவே, அகன்று செல் எனக் கூறி, உன்னை விரட்ட முடியுமோ? முடியாது. ஆகவே உன்னை ஏற்றுக்கொண்டேன். உன் குறைகளைக் கூறிப் பணிந்து நிற்க வேண்டுவது இனித் தேவையில்லை!” என்று கூறி, ஊடல் தீர்ந்து, அவனைக் கூடி மகிழ்ந்தாள்.
"கண்டேன் நின்மாயம் களவாதல்; பொய்ந்நகர்,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய, நின்
பெண்டிர் உளர்மன்னோ ஈங்கு,
ஒண்தொடி! நீகண்டது எவனோ தவறு?
கண்டது நோயும், வடுவும் கரந்து, மகிழ்செருக்கிப், 5
பாடுபெயல் நின்ற பானாள் இரவில்,
தொடிபொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவார் குழையும், இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு அடிதளரா
வாராக் கவவின் ஒருத்தி வந்து, அல்கல் தன் 10
சீரார் ஞெகிழம் சிலம்பச் சிவந்துநின்
போரார் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆயிழை யார்க்கும் ஒலிகேளா, அவ்வெதிர்
தாழாது எழுந்து நீசென்றது அமையுமோ?